லிப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பலி.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் தலைமறைவு!
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் லிப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவிற்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது.
இங்கு நேற்று முன் தினம் இரவு ஆந்திராவை சேர்ந்த மணமகனுக்கும் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறறது.

உணவு பரிமாறுதல்
அப்போது முதல் தளத்தில் உணவு பரிமாறுவதற்கு கீழ் தளத்திலிருந்து உணவு எடுத்து செல்லப்பட்டது. பல முறை எடுத்துச் சென்றதில் திடீரென அந்த லிப்ட் அறுந்து விழுந்தது. இதில் உணவு பரிமாறும் பணிக்காக வந்திருந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவன் சீத்தல் தலை நசுங்கி உயிரிழந்துவிட்டார்.

இருவர் படுகாயம்
அவருடன் லிப்ட்டில் இருந்த விக்னேஷ், ஜெயராமன் ஆகிய 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இறந்த சீத்தலின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா
இந்த நிலையில் திருமண மண்டபத்தின் உரிமையாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியா, மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய 4 மீது சிப்காட் காவல்துறையினர் ஐபிசி 304(ii) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் மகள் தலைமறைவு
இந்த விபத்து வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திருமண மண்டப உரிமையாளர் ஜெயப்பிரியா தலைமறைவான நிலையில் மற்ற 3 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 3 பேரும் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications