லேசான மழை... 2 நாட்களுக்கு வறண்ட வானிலை - பனிமூட்டமும் இருக்குமாம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு காற்றாலையின் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் மாத தொடக்கத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்தது நீர்நிலைகள் நிரம்பின. டிசம்பர் தொடக்கத்தில் இருந்தே மழை குறைந்து பனிமூட்டம் காணப்பட்டது.
டிசம்பர் கடைசி நேரத்தில் சென்னையில் பெருமழை கொட்டித்தீர்த்தது. வளிமண்டல மேலடுக்குக் சுழற்சியால் அதிகனமழை கொட்டியதாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறினார். சென்னையில் பல பகுதிகள் மீண்டும் வெள்ளக்காடானது.

நீரில் மூழ்கிய நெற்கதிர்கள்
காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்த காரணத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் வடகிழக்கு காற்றாலையின் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

லேசான மழை
இது தொடர்பாக புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு காற்றலையின் காரணமாக இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தென்தமிழக கடலோர மாவட்டங்கள்
ஜனவரி 4,5 ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மேற்கு தொடர்ச்சி மலை
ஜனவரி 03 முதல் 5 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை ரெஸ்ட்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

பலத்த காற்று வீசும்
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications