42 லட்சம் பேர் இணைக்கவில்லை.. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்னும் 3 நாட்களே கால அவகாசம்!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சுமார் 42 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
இந்த நிலையில் மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது. கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.
குழந்தையை பிரசவித்த சில மணி நேரங்களில்.. வேலையை விட்டு தூக்கிய கூகுள் ஊழியர்.. தொடரும் சோக கதைகள்
31-ந் தேதி வரை நீட்டிப்பு
ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களையும் மின்வாரியம் அமைத்தது. பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. முதலில் டிசம்பர் 31-ம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
3 நாட்களே உள்ளது
இதன்படி ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்னும் 3 நாட்களே அவகாசம் உள்ளதால், இதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 2.25 கோடி பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுக்கிறது. ஆதார் இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாததோடு, அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
42 லட்சம் பேர் இணைக்கவில்லை
இது தொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) மாநில செயலாளர் கண்ணன் கூறும் போது, இத்தனை நாட்கள் கால அவகாசம் கொடுத்தும் இன்னும் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். விடுமுறை நாட்களிலும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கணகீட்டு பிரிவு மற்றும் கள பணி ஊழியர்கள் இப்பணியை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர்.
அரசிடம் ஆலோசித்து தீர்வு
இதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிக அளவில் உள்ளது. இதனால் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்" என்றார். இதற்கிடையே, அரசிடம் ஆலோசித்து இதற்கு தீர்வு காணப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.