அன்று நடந்த மீட்.. ஸ்டாலினை நேருக்கு நேர் பாராட்டிய ஜிகே மணி.. பாமக அதிமுக கூட்டணி உடைந்தது எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுவதாக அறிவித்து உள்ளது. நேற்று பாமக கூட்டத்திற்கு பின் இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசியல் உலகை உலுக்கிய இந்த முடிவிற்கு முன்பே இரண்டு கட்சிகளின் கூட்டணியில் பிளவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கிவிட்டன... என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருந்த 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடக்காமல் இருந்த நிலையில் தற்போது ஒரு வழியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. சரியாக வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு 12 மணி நேரங்களுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாமக அறிவித்துள்ளது. அதிமுக கொஞ்சம் எதிர்பார்த்த முடிவுதான் இது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

பாமக கூட்டணி முறிவு
பாமக அதிமுக கூட்டணி முறிவிற்கான சிக்னலை ஏற்கனவே டாக்டர் அன்புமணி ராமதாஸும், ஜிகே மணியும் கொடுத்து வந்தனர். அடுத்த சட்டசபை தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று ராமதாஸ் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார். திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்பதை "மீண்டும்" அறிவித்து இருந்தார். அப்போதே உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பிளவிற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியது. சமீப காலமாக திமுக அரசின் முக்கியமான அறிவிப்புகளை பாமக பாராட்டி வந்தது. திமுகவுடன் பாமக நெருக்கம் காட்ட தொடங்கியது.

பாமக அதிமுக கூட்டணி முறிவு ஏன்?
பாமக தலைவர் ஜிகே மணியும் அவையில் தொடர்ந்து அதிமுகவிற்கு எதிரான சிக்னல்களை கொடுக்க தொடங்கினார். அவையில் அதிமுக எதிர்த்த சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் போன்ற விஷயங்களை பாமக தொடர்ந்து ஆதரித்தது. அப்போதே பாமக அதிமுக பிளவு வெளிப்படையாக தெரிய தொடங்கியது. வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை பாமக ஜிகே மணி நன்றி தெரிவித்து அவரை வரவேற்று இருந்தார். இது திமுக பாமக இடையில் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு நீங்கள் தமிழ்நாட்டின் பெருமை முதல்வரே என்று பாமக தலைவர் ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி இருந்தார். அவையில் பல முறை நேருக்கு நேர் ஸ்டாலினை ஜிகே மணி பாராட்டி கவனம் ஈர்த்தார்.

அறிவிப்பு
பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து அவையில் ஸ்டாலினை ஜிகே மணி பாராட்டினார். பின்னர் அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்வு அறிவிப்பிற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி வரவேற்பு தெரிவித்து இருந்தார். இப்படி வரிசையாக ஜிகே மணி ஒரு பக்கம் திமுகவை பாராட்ட ராமதாசும் முதல்வரை பாராட்டினார். தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பாமக கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி, என்று ராமதாஸ் வாழ்த்தி இருந்தார். அதிமுகவும் பாமக குறித்து எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தது.
Recommended Video

சட்டசபையில் சிக்னல்
இப்படி சட்டசபையில் தொடர்ந்து அதிமுகவிற்கு எதிராக பாமக நிலைப்பாடுகளை எடுத்து வந்த நிலையில்தான் தற்போது கூட்டணி முறிந்துள்ளது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் தனது மகளின் திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்தார். அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன் - கலைவாணி தனசேகரன் தம்பதியரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கும் சங்கமித்ராவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஸ்டாலினுக்கு அன்புமணி அழைப்பு விடுத்தார். இதில் இரண்டு தலைவர்களும் இணக்கமாக இருந்தனர், சில நிமிடங்கள் அரசியல் கடந்து பல விஷயங்களை விவாதித்தனர்.

திமுகவுடன் கூட்டணியா?
அதன்பின் வரவேற்பு நிகழ்ச்சியிலும் ராமதாஸ் - ஸ்டாலின் இருவரும் நட்பாக, இணக்கமாக பேசி வந்தனர். இந்த மீட்டிங் அதிமுக - பாமக கூட்டணி பிளவிற்கு மேலும் தூண்டுதலாக அமைந்தது. ஆளும் திமுகவோடு பாமக தொடர்ந்து நெருக்கமாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மொத்தமாக கூட்டணியை பாமக முறித்துக் கொண்டுள்ளது. இப்போது தனித்து நிற்கும் பாமக வரும் காலங்களில் திமுக கூட்டணிக்கு செல்லுமா என்ற கேள்விகளை இது எழுப்பி உள்ளது. பாமகவின் வரும்கால அரசியல் நிலைப்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications