திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பெரிய பூட்டு திமுகவினருக்கு? காங்.க்கு தாரை வார்க்க ‘அறிவாலயம்’ முடிவா?
சென்னை: திண்டுக்கல், கரூர் ஆகிய 2 லோக்சபா தொகுதிகளையுமே காங்கிரஸுக்கு தாரை வார்க்கலாம் என கட்சி தலைமை ஆலோசிப்பதாக வெளியாகும் தகவல்களால் இரு மாவட்டங்களின் திமுக நிர்வாகிகளும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனராம்.
லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை திமுக கூட்டணி படுதீவிரமாக நடத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்கனவே ஏகப்பட்ட உட்கட்சி மோதல்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 4 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்ததாம்.

திமுகவின் வியூகம்: தெற்கே கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை, வடக்கே திருவள்ளூர் அல்லது கிருஷ்ணகிரி ஆகிய 4 தொகுதிகளைத்தான் திமுக தலைமை காங்கிரஸுக்கு ஒதுக்க முன்வந்ததாம். ஆனால் காங்கிரஸ் கட்சி டபுள் டிஜிட் இடங்கள்தான் வேண்டும் என அடம் பிடித்து கொண்டிருக்கிறது. இதனால் டெல்லி தலைமைக்கு வேண்டியவர்களான ஜோதிமணியின் கரூர், மாணிக்கம் தாகூரின் விருதுநகர் தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளை தருவோம் என்பது திமுக தலைமையின் திட்டமாம். டெல்லி தலைமை மேலும் நெருக்கடி தரும் நிலையில் 7+ புதுச்சேரி என மொத்தம் 8 தொகுதிகளுடன் பேச்சுவார்த்தையை முடிக்க நினைக்கிறதாம் திமுக. 2019 லோக்சபா தொகுதிகளில் 9 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் 8 இடங்களில் தமிழ்நாட்டில் வென்றது. அதனடிப்படையில் பார்த்தால் காங்கிரஸுக்கும் இது கவுரவமான தொகுதி பங்கீடாகவே இருக்கும் என்பதும் திமுகவின் கணக்கு.
காங்கிரஸுக்கு கரூர் தர எதிர்ப்பு: இந்த நிலையில் கரூர் தொகுதியை காங்கிரஸுக்கு தரக் கூடாது என திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் திமுகவினர் பதிவிட்டும் வருகின்றனர். இப்போது திமுகவினருக்கு இன்னொரு அதிர்ச்சியாக திண்டுக்கல் லோக்சபா தொகுதியையும் கூட காங்கிரஸுக்கே திமுக தலைமை விட்டுத் தரக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
திண்டுக்கல்லும் காங்கிரஸுக்கா?: திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் கடந்த 2019-ல் திமுக திமுக வேட்பாளராக வேலுச்சாமி அறிவிக்கப்பட்ட போது அக்கட்சியினரே யார் இவர்? என்ற கேள்வி கேட்கும் அளவுக்கு 'அறிமுகம் இல்லாத'வராக இருந்தார். இதனால் சலசலப்புகளும் ஏற்பட்டன. ஒருவழியாக முட்டி மோதி வேலுச்சாமி எம்.பியான பின்னரும் கூட அப்படி ஒன்றும் ஆக்டிவ்வாக இல்லை என்பதுதான் திண்டுக்கல் திமுகவினரின் குமுறல். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக்டிவ்வாக இப்போதும் செயல்படுகிறவர்கள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், பழனி எம்.எல்.ஏ. ஐபி செந்தில்குமார்தான். இவர்களுடன் இணைந்து நிற்பவராக மட்டுமே வேலுச்சாமி எம்பி இருக்கிறார். இதனால் திமுகவில் காலம் காலமாக உழைத்து கொண்டிருக்கும் சிலரை 'அடையாளப்படுத்தி' வேட்பாளராக நிறுத்தினால் நல்லது என திமுகவினர் ஆதங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திண்டுக்கல் தொகுதியையும் காங்கிரஸுக்கே தாரைவார்த்துவிட்டால் என்ன என்கிற திமுக தலைமையின் ஊசலாட்டம் அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications