திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்..அந்த 3 தொகுதிகளில் பாஜகதான்.. "விஐபி" தோல்விமுகம்? India TV சர்வே
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிதான் அமோக வெற்றியைப் பெறும்; அதே நேரத்தில் பாஜக 3 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பு உள்ளது என்கிறது India TV கருத்து கணிப்பு.
தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. தமிழ்நாடு, புதுவையில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணிகள் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் திமுக 21; காங்கிரஸ் 9; இடதுசாரிகள் 4; கொமதேக -1 மதிமுக- 1 விசிக 2; முஸ்லிம் லீக்- 1 தொகுதியில் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் அதிமுக 32; தேமுதிக 5; புதிய தமிழகம் -1; எஸ்டிபிஐ -1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜக அணியில் பாஜக 19; பாமக 10, தமாகா 3, அமமுக 2-ல் போட்டியிடுகின்றன. புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை பாஜக சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பாஜகவின் தாமரை சொன்னம் மொத்தம் 23 தொகுதிகளில் களம் காண்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்தே 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான India TV கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முடிவுகள் விவரம்:
திமுக- 18
காங்கிரஸ் -8
அதிமுக -4
பாஜக - 3
பாமக -1
இதர கட்சிகள் -5
இதில் பாஜக வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள்: கன்னியாகுமரி, கோவை, வேலூர் என்கிறது India TV கருத்து கணிப்பு.
கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்; காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்பி விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இங்கு பொன்.ராதாகிருஷ்ணன் வெல்லக் கூடுமாம்.
கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் களத்தில் உள்ளனர். பாஜக தலைவர் அண்ணாமலை, கோவையில் வெல்லும் வாய்ப்புள்ளதாம்.

தென் சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக சிட்டிங் எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் களம் காண்கிறார். இத்தொகுதியில் தமிழச்சி தங்க பாண்டியன் முன்னணியில் இருக்கிறாராம். தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியை எதிர்கொள்ளக் கூடுமாம்.
பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம், வேலூர் தொகுதியில் வெல்லும் வாய்ப்புள்ளது என்கிறது இந்த கருத்து கணிப்பு. இத்தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்பி 2-வது முறையாக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications