புதுவையில் லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் பிரமாண்ட வெற்றி.. முதல் தேர்தலிலேயே அசத்தல்
புதுவை: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ஜோஸ் சார்லஸ் மார்டின் வெற்றியை பதிவு செய்துள்ளார். என்.டி.ஏ கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சி (LJK) சார்பில் போட்டியிட்ட அவர் 16,592 வாக்குகள் பெற்று, 10,205 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தேவதாஸை வீழ்த்தியுள்ளார்.
புதுவை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. யூனியன் பிரதேசமான புதுவையில் இந்த முறை ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படியே என்.டி.ஏ கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்று ரங்கசாமியே மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். அதேவேளையில் லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கியது.

காமராஜ் நகர்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லட்சிய ஜனநயக கட்சி இரண்டு இடங்களில் போட்டியிட்டது. கமாராஜ் நகரில் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தேவதாஸ், தவெக சார்பில் சுமன், நாம் தமிழர் கட்சி சார்பில் கவுரி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லெனின் துரை ஆகியோர் போட்டியிட்டனர். காமராஜ் நகரில் 87.22 சதவீத வாக்குகள் பதிவானது.
ஜோஸ் சார்லஸ் மார்டின் வெற்றி
இந்த நிலையில் ஆரம்பம் முதலே ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலை பெற்று வந்தார். தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த அவர், இறுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதாவது 16,592 வாக்குகள் பெற்று, 10,205 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதில், காங்கிரஸ் வேட்பாளர் P.K. தேவதாஸ் 6,387 வாக்குகளுடன் தோல்வியடைந்தார். அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் சுமன் (6,289 வாக்குகள்) மற்றும் நாம் தமிழர் கட்சியின் பி. கவ்ரி (693 வாக்குகள்) ஆகியோரும் பின்னடைவை சந்தித்தனர்.
எவ்வளவு வாக்குகள்
* லட்சிய ஜனநாயகக் கட்சி - ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் - 16,592 வாக்குகள்
* காங்கிரஸ் - P.K. தேவதாஸ் - 6,387 வாக்குகள்
* தமிழக வெற்றி கழகம் - சுமன் 6,289 வாக்குகள்
* நாம் தமிழர் கட்சி - பி. கவ்ரி - 693 வாக்குகள்
பணக்கார வேட்பாளர்:
பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான மார்ட்டினின் மகன் என்பதால் இவரது சொத்து மதிப்பு பெரிய அளவில் புதுவையில் பேசப்பட்டது. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரத்தில் தன்னிடம் கையிருப்பாக 20 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவி சிந்துஸ்ரீ சார்லஸிடம் 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயும் உள்ளது என்று கூறியிருந்தார்.
25.67 கோடி ரூபாய் மதிப்பிலான 17 ஆயிரத்து 525 கிராம் தங்கமும், 44 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்களும், 3 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான 134 கிலோ வெள்ளியும், 38 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்சுகளும், ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான முத்துக்கள் இருப்பதாக கூறியிருந்தார்.
597 கோடி ரூபாய்
ஜோஸ் சார்லஸிடம் விவசாயம் அல்லாத நிலம் 192 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. குடியிருப்பு கட்டிடங்கள் 269 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளன. சொத்தில் 19 கோடியே 45 லட்சம் ரூபாய் கடனும், கார் லோன் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. அசையும் சொத்துகள் என்று பார்த்தால் 328 கோடி ரூபாயும், மனைவியிடம் 10 கோடியே 61 லட்சம் ரூபாய் அளவிலும் உள்ளன என்று கூறியிருந்தார். கிட்டத்தட்ட அனைத்தையும் சேர்த்தால் 597 கோடி ரூபாய்க்கு தன்னிடம் சொத்து உள்ளதாக வேட்பு மனுவில் கூறியிருந்தார்.














Click it and Unblock the Notifications