வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது - தமிழகத்தில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வரும் 9ஆம் தேதியன்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, கடலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் நேற்று ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருந்தது. சேலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரி உடைந்து 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. டி.பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழைநீர் முழுவதும் குடியிருப்புக்குள் புகுந்த 50க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதில் சில சிறிய வகை ஓட்டு வீடுகள் முழுவதும் இடிந்து விழுந்தன.
கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்தில் அதிகபட்சமாக 11 செமீ மழை பதிவாகியிருந்தது. ராசிபுரத்தில் 8 செமீ மழையும் சிவகாசி, பேரையூரில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம், பென்னாகரம், ஸ்ரீவில்லிபுத்தூர், மஞ்சலாறு, குப்பநத்தம், ஆழியாறு, கொடைக்கானலில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. வைகை அணை, அவலாஞ்சி, ஒகேனக்கல்,ஊத்துக்குளி, வேதாரண்யம், ஆண்டிப்பட்டி, மாத்தூரில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. இதனிடையே இன்று முதல் 9ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் கனமழை
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ,பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இடி மின்னலுடன் மிதமான மழை
நாளைய தினம் 6ஆம் தேதியன்று நீலகிரி, கோயம்புத்தூர்,ஈரோடு ,சேலம், தருமபுரி ,கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

டெல்டா மாவட்டங்களில் மழை
நாளை மறுநாள் நவம்பர் 7ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

மிதமான மழை
வருகிற 8ம் தேதி தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் , புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 9ஆம் தேதி தென்மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் மிதமான மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 செமீ மழை பதிவாகியுள்ளது. குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

சூறாவளிக்காற்று
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற நவம்பர் 9ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இன்று மற்றும் நாளை மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல்
கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவின் கிழக்குக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் . 7ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இயல்பை விட அதிக மழை
அடுத்த இரண்டு வாரங்களில் தெற்கு மற்றும் உள் தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வட கடலோர பகுதி, உள் மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications