எல்டிடிஇக்கு ஆள்சேர்ப்பு? வைகோ மாஜி உதவியாளரிடம் கியூ பிரிவு போலீஸ் விசாரணை.. செல்போன் பறிமுதல்
சென்னை: விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆள் சேர்க்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரிடம் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற நாட்டை உருவாக்கும் நோக்கத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு சுருக்கமாக எல்டிடிஇ என்று அழைக்கப்பட்டு வருகிறது. தலைவராக பிரபாகரன் செயல்பட்டு வருகிறார்.

இலங்கை அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக இலங்கையில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்தியாவில் இந்த அமைப்புக்கு தடை உள்ளது. இதற்கிடையே தான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்க்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்தை பிடித்து சென்னை க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கேகே நகரில் தற்போது பிரசாத் வசித்து வருகிறார். அங்குள்ள அவரது வீட்டில் கியூ பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு பிரசாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கியூ பிரிவு போலீசாரின் பார்வை பிரசாத் பக்கம் திரும்ப ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது கடந்த டிசம்பர் மாதம் மாங்காட்டில் சட்டவிரோதமாக தங்கியதாக இலங்கையை சேர்ந்த 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களின் பெயர்கள் நவநாதன், இலக்கியன். இவர்களுக்கு எல்டிடிஇ அமைப்புடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் 2 பேருக்கும் மாங்காட்டில் தங்க வைத்தது யார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தான் பிரசாத்தின் பக்கம் கியூ பிரிவு போலீசாரின் பார்வை என்பது திரும்பியுள்ளது. எல்டிடிஇ அமைப்பு இலங்கையில் தமிழீழம் கேட்டு போராடியபோது தமிழகத்தின் பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதில் வைகோவும் முக்கியமான ஒருவர். இப்படியான நிலையில் தான் பிரசாத்திடம் சென்னை கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications