கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு மனைவி ஸ்ருதியுடன்! மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் தனது மனைவி ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். நேற்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய நிலையில் அவர் இன்று ஆஜராவதாக கேட்டுக் கொண்டதற்கு மகளிர் ஆணையமும் ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் அவர் இன்று ஆஜராகியுள்ளார்.

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரின் விசேஷங்களுக்கு சமையல் செய்யும் பணியை செய்து வருகிறார். இவருடைய சமையலுக்கு ருசி கொடுப்பதே சிறுவாணி ஆற்றுத் தண்ணீர்தான் என பல இடங்களில் அவர் கூறியுள்ளார்.
தனது தந்தையின் சமையல் தொழிலை பழைய காலம் போல் அல்லாமல் ஹைடெக்காக கொண்டு வந்துள்ளார். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் மீது ஆடை வடிவமைப்பாளராக உள்ள ஜாய் கிரிஸில்டா என்பவர் கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்திருந்தார்.
ரங்கராஜ்தான் கணவர்
அந்த புகாரில், "ரங்கராஜ் என்பவர் எனது கணவர், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த இரு ஆண்டுகளாக ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த இரு மாதங்களாக எனது தொடர்பை அவர் முற்றிலும் துண்டித்துள்ளார். நான் அவரை நேரில் சந்திக்க முயன்ற போது என்னை அடித்து விரட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும்.
சேர்ந்து வாழ நடவடிக்கை
அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சமூகவலைதள பக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்
மேலும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார் தொடர்பாக கடந்த மாதம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா ஆஜராகி புகைப்படங்கள், செல்போன் உரையாடல் அனைத்தையும் கொடுத்து அதிகாரிகள் கேட்ட கேள்விக்கும் மணிக்கணக்கில் விளக்கம் அளித்தார்.
ஜாய் கிரிஸில்டா
அது போல் மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அங்கு பார்த்துக் கொள்கிறேன் என காவல் துறையினரிடம் ரங்கராஜ் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி தொடர்பாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதால் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்திருந்தார்.
சம்மன் அனுப்பிய மகளிர் ஆணையம்
அந்த புகாரில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாய் குறிப்பிட்டுள்ளார். தனது வழக்கறிஞர் சுதாவுடன் மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை ஜாய் அளித்துள்ளார். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் நாளை ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதன் பேரில் அவர் அக்டோபர் 15 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவரோ இன்று (அக்டோபர் 16) ஆஜராவதாக மகளிர் ஆணையத்தில் அனுமதி கேட்டிருந்தார். அதற்கு ஆணையமும் ஒப்புக் கொண்டது.
ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்
இந்த நிலையில் இன்றைய தினம் தனது மனைவி ஸ்ருதியுடன் மகளிர் ஆணையத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் வந்துள்ளார். அது போல் ஜாய் கிரிஸில்டாவும் வந்திருக்கிறார். இந்த முறை இருவரிடமும் ஒன்றாகவே விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications