கோயில் நகைகளை உருக்கும் பணி.. எந்த முடிவும் தற்போது எடுக்கக்கூடாது... உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கோவில்களில் நன்கொடையாக வழங்கப்பட்ட நகைகள் மட்டுமே உருக்கப்படும் எனவும், அறங்காவலர்கள் நியமிக்கப்படும் வரை கணக்கெடுக்கும் பணிதான் நடைபெறும் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, கட்டிகளாக மாற்றி வங்கிகளில் வைப்பீடு வைப்பது, கோவில் உபரி நிதியில் கல்லூரி துவங்குவது உள்பட 112 அறிவிப்புகள் தமிழகச் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை.. தமிழக - கேரள முதல்வர்கள் டிசம்பரில் முக்கிய மீட்டிங்.. வெளியான பரபர தகவல்
நீதிமன்றத்தில் வழக்கு
இந்த உத்தரவை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை மற்றும் டி.ஆர்.ரமேஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், அறநிலையத்துறை விதிகளின்படி, கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் தங்க நகைகளை உருக்க அனுமதிக்கக் கூடாது எனக் கூறப்பட்டதுடன் கோவில்களின் தங்க நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அரசு விளக்கம்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், கோவிலுக்குச் சொந்தமான நகைகளை உருக்கவில்லை என்றும், கோவிலுக்குக் காணிக்கையாக வந்த நகைகள் மட்டுமே உருக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரும் அடங்கிய குழு அமைத்து, நகைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
ரூ 11.50 கோடி வருவாய்
ஏற்கனவே நகைகள் உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் வட்டி வருவாயாகக் கிடைத்துள்ளதாகவும், அது கோவில் நலனுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கோவில்கள் சீரமைப்புக்கு நிதி தேவைப்படுவதாகவும், கடந்த 11 ஆண்டுகளாகத் தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறியதையடுத்து, அரசு தரப்பில் நகைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனவும், ஆனால் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே அவை உருக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கோவிலுக்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளைக் கணக்கெடுக்கலாம் எனவும், அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்குப் பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மற்ற வழக்குகளுடன் சேர்த்து டிசம்பர் 15ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.