'போலீஸைகூட யூஸ் பண்ணுங்க,ஆனா 4 வாரம்தான் டைம்..' உள்ளாட்சி தேர்தல் வழக்கு.. ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை 4 வாரத்தில் நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 டிசம்பர் மாதம் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட, மன்ற தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மறைமுக தேர்தல் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட பரிமளா பழங்குடியினர் எனப் போலி சான்றிதழ்கள் பெற்று தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதால், வேட்புமனுவை ஏற்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, கவுன்சிலர்கள் செல்வி, லதா ஆகிய இரு பழங்குடியின கவுன்சிலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நான்கு வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல் நடத்தத் தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யலாம் எனவும், காவல்துறை பாதுகாப்பு தேவை என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications