மன உளைச்சலா இருக்கு.. கஷ்டமா இருக்கு.. கோர்ட்டுக்கு போன எடப்பாடி.. உயர் நீதிமன்றம் தந்த குட்நியூஸ்
சென்னை: நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அறப்போர் இயக்கம் பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018லேயே ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டது.
முறைகேடு
கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22ம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இது போக ஆர். எஸ் பாரதி சார்பாக வைக்கப்பட்ட புகாரில், மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது . அதன்படி வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது.
புகார்
இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது. அதோடு பல்வேறு கோட்ட சாலைகளை மேம்படுத்துவதில், புதிய சாலைகள் போடுவதில் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆர். பாரதி புகார் மட்டுமின்றி, எடப்பாடி மேற்கொண்ட வேறு சில டெண்டர்கள் தொடர்பாகவும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. 2020ல் 3 டெண்டர் தஞ்சை கோட்டத்தில் வழங்கப்பட்டது. இதில்தான் முறைகேடு நடந்துள்ளது என்று அறப்போர் இயக்கத்தின் புதிய புகாரில் கூறப்பட்டு உள்ளது.
சமூக வலைத்தளம்
இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது. இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும், தன்னை பற்றி அவதூறாக பேசுவதற்கு தடைவிதிக்கக்கோரியும் எடப்பாடி சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மனு தாக்கல்
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் மற்றவர்கள் கருத்து சொல்ல முடியாது. டெண்டர் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடந்ததாக சொல்ல முடியாது. இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒரு நிறுவனத்திற்க்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை. மேலும் டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. நிறுவனங்கள் முறைகேடு என்று சொல்லாத போது அறப்போர் இயக்கம் எப்படி சொல்ல முடியம். அவர்கள் டெண்டரில் கலந்து கொள்ளவே இல்லையே. எனவும் வாதிடப்பட்டது.
புகழ் களங்கம்
மேலும் தம்முடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் குற்றம்சாட்டப்படுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி வாதிடப்பட்டது. அறப்போர் இயக்கம் சார்பில், ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரை தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. அவருக்கு எதிரான புகாருக்கு ஆதாரங்கள் இருக்கிறது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்து உள்ளது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ஜனநாயகத்தில் மாற்று கருத்து என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று எனவும் அதுதான் வலுவான ஜனநாயகத்தின் அடி நாதம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
என்ன முறைகேடு
2018-19 ஆண்டில் போடப்பட்ட சாலையை மீண்டும் போடுவதற்காக ரூ 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி டெண்டர் ஒதுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், டெண்டர் குறித்த முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்ததால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பு எனவும் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.