"மதம் மாறிய ஒருவர்.. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை பெற முடியாது.." சென்னை ஐகோர்ட் கருத்து
சென்னை: மதம் மாறியவர் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு சதவீகிதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கி வருகிறது.
மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்ககீட்டை கொண்டு வந்தது. இது தொடர்பான வழக்கிலும் மத்திய அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.
சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீட்டிற்கு அநீதி! தமிழக அரசு தலையிட வேண்டும்! வேல்முருகன் வேண்டுகோள்!
இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இங்கு சமூக மற்று கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகத்தினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 69% இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதற்கிடையே மதம் மாறிய நபர் இட ஒதுக்கீட்டு பலனை பெறுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் கூறிய கருத்துகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நிராகரிப்பு
இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், தனக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடஒதுக்கீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது இந்த கோரிக்கையை நிராகரித்த சென்னை ஐகோர்ட், வேறு மதத்திற்கு மாறிய பிறகு ஒருவர் தனது சாதியை சுமக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகளையும் சென்னை உயர் நீதிமன்றம் மேற்கோள் காட்டியது.
மதம மாறினால் இல்லை
அதாவது ஒருவர் இந்து மதத்தில் இருந்து வேறு ஒரு மதத்திற்கு மாறினால், அவரால் சாதியை சுமக்க முடியாது. அதேநேரம், அவர் மீண்டும் இந்து மதத்திற்கு வந்தால், மீண்டும் அதே சாதியில் வந்துவிடுவார் என்று கூறியது. இதற்காக நீதிமன்றம் கிரகணக் கோட்பாட்டையும் மேற்கோளிட்டு காட்டியிருந்தது. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து கோரிய தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த கருத்துகளை கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம்
தலித்துகள் மதம் மாறிய பின்னர் இட ஒதுக்கீட்டு பலனை பெறுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்து, சீக்கியம் மற்றும் பௌத்தம் தவிர மற்ற மதங்களுக்கு மாறுபவர்களுக்கு பட்டியலின சாதி அந்தஸ்தை வழங்கவில்லை என கூறும் அரசியலமைப்பு ஆணை 1950 பாரபட்சமானது என்றும் இது அரசியலமைப்பின் 14 மற்றும் 15ஆவது பிரிவுகளை மீறும் வகையில் உள்ளதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 'தேசிய தலித் கிறிஸ்தவர்களின் கவுன்சில்' உள்ளிட்ட பலரும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பதில் மனு
இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு மத்திய அரசு நவ.10ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்தது. அதில், "அரசியலமைப்பு ஆணை, 1950 வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூகத்தினனர் ஒடுக்குமுறையை ஒருபோதும் எதிர்கொள்ளவில்லை. நிறுவியது. உண்மையில், பட்டியலின சாதியைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் மதத்திற்கு மாறுவதே தீண்டாமையின் ஒடுக்குமுறையில் இருந்து வெளியே வர தான்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.