கட்சிக்கு களங்கம்.. பாஜகவிலிருந்து டாக்டர் சரவணன் நீக்கம்.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு
சென்னை: பாஜகவிலிருந்து டாக்டர் சரவணன் நீக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை நகர், மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணமடைந்த லட்சுமணனின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்தது. அவரது உடலுக்கு விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்கு பாஜகவினரும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அஞ்சலி
தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பாஜகவினர் கலந்து கொள்வது புரோட்டோகால்படி சரியில்லை என்று போலீஸாரிடம் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். அப்போது சில வார்த்தை போரினால் பாஜகவினருக்கு கோபம் ஏற்பட்டது.

பெண் நிர்வாகி
அப்போது பிடிஆர் பழனிவேலின் கார் மீது பாஜக பெண் நிர்வாகி ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பிடிஆரின் வீட்டுக்குச் சென்ற சரவணன், அங்கு அவரிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரவணன், கட்சியில் காலையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தது மனதிற்கு வேதனை தருகிறது.

மத அரசியல்
பாஜகவில் மத அரசியல், வெறுப்பு அரசியல் இருக்கிறது. மருத்துவரான நான் அனைவருக்கும் பொதுவானவர். இவர்களது மத அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. இனியும் பாஜகவில் தொடர போவதில்லை. காலை எனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன். திமுகவில் இணைந்தால் என்ன தவறு, அது என் தாய் வீடு. 10,15 ஆண்டுகள் திமுகவில்தானே இருந்தேன் என தெரிவித்திருந்தார். பாஜகவிலிருந்து சரவணனே விலகி ராஜினாமா கடிதம் கொடுக்க இருந்த நிலையில் மாநில தலைவர் அண்ணாமலையே அவரை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications