மக்களை எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்திருந்தால் ஸ்டாலின் அரசு இதை செய்யும்.. யூடியூபர் கேள்வி!
சென்னை: தமிழ்நாட்டில் 1.31 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5 ஆயிரத்தை ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருப்பது வலதுசாரிகள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தேர்தலுக்காக நேரடியாக பணம் கொடுக்கும் நடைமுறையை திமுக கையில் எடுத்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் தமிழ்நாட்டிற்கான தேர்தல் தொடர்பாக தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்தலின் போது மகளிருக்கான உரிமைத் தொகை திட்டம் 3 மாதங்களுக்கு முடக்கப்படலாம் என்று தெரிகிறது.

மகளிர் உரிமைத் தொகை
இதனால் முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையாக ரூ.3 ஆயிரமும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் என்று மொத்தமாக ரூ.5 ஆயிரம் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்குக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக திமுக மகளிர் உரிமைத் தொகையை மொத்தமாக கொடுத்திருப்பது பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.
வலதுசாரிகள் விமர்சனம்
அதுமட்டுமல்லாமல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன. அதேபோல் எதிர்க்கட்சிகளும், வலதுசாரிகளும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஏற்கனவே தமிழ்நாட்டின் கடன் தொகை அதிகமாகி இருக்கும் சூழலில், இது தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கொந்தளிக்கும் யூடியூபர்
இதனிடையே பிரபல வலதுசாரி யூடியூபர் கெவின் பால் மகளிர் உரிமைத் தொகையை உயர்வு அறிவிப்பையும், முதல்வர் ஸ்டாலினின் ரூ.5 ஆயிரம் அறிவிப்பையும் விமர்சித்துள்ளார். அதில் கெவின் பால், ஓட்டுக்கு பணத்தை legally கொடுப்பது எப்படி? வழக்கமான தேர்தல் நடைமுறையை வில்லனாக சித்தரிக்க வேண்டும்.
வாக்குக்கு பணமா?
தேர்தல் காலத்தில் பணம் கொடுக்கக்கூடாது என்கிற சரியான நடைமுறையை ஒடுக்குமுறையாக மாற்ற வேண்டும். Imaginary villain ரெடி. Advance-ஆக 3,000 மட்டுமல்லாமல், கோடை வெயிலில் மக்கள் தர்பூசணி சாப்பிட வசதியாக 2,000. தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு டோக்கன் கொடுக்க வேண்டாம், வேட்டிக்குள் மறைத்து வைத்து நான்கு 500 ரூபாய் தாளை நீட்ட வேண்டாம்; நேரடியாக, வெளிப்படையாக பணத்தைக் கொடுத்து பெண்களின் வாக்கை வாங்கிவிடலாம் என்று பதிவிட்டுள்ளார்.
பீகாரில் நடந்தது என்ன?
அதேபோல் பீகார் தேர்தலின் போது ஒவ்வொரு பகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்த போது, அந்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் உதவித் தொகையாக 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கப்பட்டது. இது தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது வலதுசாரிகள் பலரும் அமைதி காத்ததாக விமர்சிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications