மாண்டஸ் புயல் எதிரொலி.. தமிழகத்தில் இன்று இரவு ஆம்னி பஸ்கள் இயங்குமா? என்ன சொல்கிறார் சங்க தலைவர்?
சென்னை: மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் நிலையில் சென்னையில் மாநகர அரசு பஸ்கள் இன்று இரவு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரவு ஆம்னி பஸ்கள் இயக்கப்படுமா என்பது பற்றி அனைத்து ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் தீவிர புயலாக உருமாறிய நிலையில் இன்று மதியம் அது வலுவிழந்தது. தற்போது புயலாக இது உள்ளது.
இந்த புயல் இன்று காலை 5.30 மணியளவில் காரைக்காலில் இருந்து கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவும், சென்னையில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கு மையம் கொண்டுள்ளது.
தீப திருவிழா..திருவண்ணாமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு..2700 சிறப்பு பஸ்கள் இயக்கம் - முழு விபரம்
நள்ளிரவில் கரையை கடக்கும் புயல்
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுகுறைந்து இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை தமிழ்நாட்டின் மாமல்லபுரம் அருகே புயலாக கரையை கடக்க உள்ளது. புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் கடலோர மாவட்டங்கள், கடலோர வழித்தடங்களில் இன்று இரவு பஸ்கள் இயக்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்கள் இயங்குமா?
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்கள் இயங்குமா? இயங்காதா? என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு அனைத்து ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛தமிழகத்தில் வழக்கம்போல் ஆம்னி பஸ்கள் இயங்கும். வார இறுதி நாள் என்பதாலும், ஏற்கனவே பயணிகள் பயணத்தை திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.
சென்னையில் பஸ்கள் இயங்குமா?
இருப்பினும் சென்னையில் இன்று இரவு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பஸ்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு நேரத்தில் 603 வழித்தடங்களில் மொத்தம் 555 மாநகர அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாண்டஸ் புயல் கரையை கடப்பதால் இன்று இரவு சென்னையில் மாநகர அரசு பஸ்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்
மேலும் தமிழ்நாட்டில் வழக்கம்போல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கும் என தற்போது புதிய அ்றிவிப்பு செய்யப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வேளையில் மட்டும் 3 மணிநேரத்துக்கு முன்பு சென்னை, புதுச்சேரி உள்பட பல்வேறு கடற்கரையோர சாலைகளில் இயங்க வேண்டிய பஸ்கள் நிறுத்தப்படும் எனவும் மாற்று வழிப்பாதையில் இயக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.