மெரினா மரப்பாதை.. மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறு? “தனிமைப்படுத்த வேண்டாம்” மனுஷ்யபுத்திரன் உருக்கம்!
சென்னை : மாற்றுத் திறனாளிகள், கடலில் கால் நனைக்க ஏதுவாக மெரினாவில் அமைக்கப்பட்ட மரப்பாதையை மாற்றுத்திறனாளி அல்லாதவர்களே அதிகம் பயன்படுத்துவதாக விமர்சிக்கப்படும் நிலையில், மாறுபட்ட பார்வையை முன்வைத்துள்ளார் கவிஞரும், திமுக நிர்வாகியுமான மனுஷ்யபுத்திரன்.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையைக் கண்டுகளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மரப்பாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ நேற்று முன்தினம் திறந்து வைத்தார்
இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் தான், மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகே செல்ல ஏதுவாக இதுபோன்ற மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்ட மரப்பாதையை பொதுமக்களே அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் நோக்கமே சிதைகிறது, இந்த நிலை நீடித்தால் மரப்பாதை விரைவில் சேதமடையும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நம்ம சென்னை நம்ம மெரினா! சர்வதேச கடற்கரை தூய்மை தினம்! சென்னை கடற்கரைகளில் குவிந்த தன்னார்வலர்கள்!
மெரினா மரப்பாதை
சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், மணற்பரப்பில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது. இந்த நடைபாதையில் சிரமம் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கடந்த 27ஆம் தேதி திறந்துவைத்தார்.
மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள்
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபலகையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். காலை வேளையில் நடைபயிற்சி செல்வோர் மற்றும் பிற நேரங்களில் மாற்றுத்திறனாளி அல்லாதவர்களே இந்த நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் மரப்பலகை விரைவாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இப்பாதையை பயன்படுத்துவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நோக்கமே சிதைகிறது
பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால், மாற்றுத்திறனாளிகள் அதில் செல்வதற்கு மிகுந்த இடையூறு ஏற்படும், இது மரப்பாதை திட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும், எனவே மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தவிர மற்றவர்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கவிஞரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகருமான மனுஷ்யபுத்திரன், மாற்றுத் திறனாளிகள் மட்டும்தான் அந்தப் பாதையை பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரியானதல்ல எனக் கூறியுள்ளார்.
மனுஷ்யபுத்திரன் கருத்து
இதுதொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "மெரீனாவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலத்தில் எல்லோரும் நடந்து செல்வது குறித்த கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். இதில் எனக்கு சற்று மாறுபட்ட பார்வை இருக்கிறது. அந்த மரப்பாலத்தை அதிகமானோர் உபயோகித்தால் அது சேதமடைய வாய்ப்பிருக்கிறதா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர அதை மாற்றுத் திறனாளிகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரியானதல்ல. அது மாற்றுத் திறனாளிகளைத் தனிமைப்படுத்தும் கொள்கையாகும்.
தனிமைப்படுத்த வேண்டாம்
பார்க்கிங், டாய்லட் போன்றவற்றில் தனி ஏற்பாடுகள் என்பது சில பிரத்யேக தேவைகள் கருதிச் செய்யப்படுபவை. ஆனால் கடலுக்கு செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பாலம் இருந்தால் அவர்களோடு மற்றவர்களும் இணைந்து நடந்தால்தான் மாற்றுத்திறனாளி என்ற தனிப்பார்வை மறைந்து குறைபாடுகள் எனக் கருதப்படுபவை " நார்மலைஸ் " ஆகும். அந்த மரப்பாலத்தில் பத்து சக்கர நாற்காலிகளோடு சேர்ந்து எனது சக்கர நக்கர நாற்காலியும் ஊர்வலமாகச் செல்வதையோ அல்லது என் சக்கர நாற்காலி மட்டும் தனியாகச் செல்வதையோ நான் விரும்பமாட்டேன்.
நடக்கும், ஓடும் மனிதர்களுடன்
நான் நடக்கிற, ஓடுகிற மனிதர்களுடன் இணைந்து செல்லவே விரும்புகிறேன். அங்கு நடப்பவர்களுக்கு இணையாக நானும் நடக்க ஒரு மோட்டார் பொருத்திய தானியங்கி சக்கர நாற்காலியைகூட சமீபத்தில் வாங்கினேன்.
மாற்றுத்திறளிகளுக்கு சில கூடுதல் வசதிகள் தேவை. ஆனால் அது ஒருபோதும் அவர்களை தனிமைப்படுத்துவதாக இருக்கக்கூடாது. 'நரகத்திற்குப் போகும் பாதை நல்லெண்ணங்களால் ஆனது' என்ற பொன் வாசகத்தைதான் இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.