பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்காமல்... கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துக -மார்க்சிஸ்ட் கம்யூ.
சென்னை: பொதுமக்களிடம் அபராதம் வசூலிப்பதை விட்டு விட்டு, கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் 10 ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு;
1. தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்
2. மாவட்ட, மாநில அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்
3. தமிழகத்தினுடைய தேவைக்கான தடுப்பூசியினை மத்திய அரசிடம் வற்புறுத்தி பெற்றிட வேண்டும். அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட வேண்டும்
4. கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
5. ரெம்டிசிவர் மருந்து மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை உறுதி செய்திட வேண்டும். அனைத்து மருத்துவ முகாம்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் தேவையான அளவிற்கு பணியமர்த்தப்பட வேண்டும். இம்முகாம்களில் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
உக்கிரமடையும் கொரோனா.. இந்தியாவில் ஜூனில் தினசரி 2320 மரணங்கள் ஏற்படும்.. லான்செட்
6. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயித்திட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அதனை விளம்பரப்படுத்திட வேண்டும்.
7. அபராதம் விதிப்பதை கைவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். கபசுர குடிநீரும் வழங்கிட வேண்டும். அனைவருக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கிட வேண்டும்.
8. ஆர்.டி., பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகளின் அடக்கவிலை ரூ.200/- அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் பரிசோதனைக் கட்டணம் ரூ. 1500/- வரை வசூலிக்கப்படுகிறது. இது குறைக்கப்பட வேண்டும்.
9. முன்களப்பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும்
10. குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ. 7,000/- வழங்கிட வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.