சென்னையில் தீபாவளி தினத்தன்று மட்டன், சிக்கன் உள்ளிட்ட இறைச்சி விற்பனைக்கு தடை: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: சென்னையில் நவம்பர் 4ம் தேதி இறைச்சிக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளி தினத்தில் இறைச்சி வாங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தளவில் கணிசமானோர் தீபாவளி தினத்தன்று இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள். காலையிலேயே இட்லி அல்லது தோசைக்கு, மட்டன், சிக்கன் போன்ற குழம்புகளை தயார் செய்து ஆரம்பிக்கும் விருந்து, இரவு உணவு வரை தொடரும்.
இந்த நிலையில்தான், இவ்வாண்டு, தீபாவளி தினத்தன்று, இறைச்சி விற்பனைக்கு தடை விழுந்துள்ளது.

மாமிச விற்பனைக்கு தடை
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் மகாவீர் நிர்வான் நாள் 04.11.2021 (வியாழக்கிழமை) அன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளையும் மூடிவைத்திருக்க பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மண்டலம் 5க்குட்பட்ட கோட்டங்கள் 49 முல் 63 முடிய உள்ள அனைத்து கோட்டங்களிலும் அமைந்துள்ள ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி கடைகளை 04.11.2021 (வியாழக்கிழை) அன்று மூடி வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல் பொருள் அங்காடியிலும்
மஹாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு நவ.4 ஆம் தேதி அன்று சென்னையில் இறைச்சிக்கடைகள், கூடங்கள் இயங்க சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளதோடு, பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாமிசத்தை எந்த வகையிலும் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. புதன்கிழமையே மாமிசங்களை வாங்கி வைத்து அடுத்த நாள் பயன்படுத்த வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படும் என்று தெரிகிறது. உத்தரவை மீறிம் கடைகளை அதிகாரிகள் கண்காணிக்கவும், மீறி திறந்தால் நடவடிக்கை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவீரர் துறவு
மகாவீரர் நிர்வாணம் பெற்ற நாள், என்பது அவர் மோட்சம் பெற்ற தினத்தை குறிப்பிடும் நாள். இந்த வருடம் மட்டும் கிடையாது சமீப காலமாக ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தன்று தமிழகத்தில் இறைச்சி கடைகளை மூடி வைக்க உத்தரவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த வருடம் தீபாவளி தினத்தில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பல மக்களுக்கும் சற்று வித்தியாசமாக உணர முடிகிறது.

விளக்கம்
தமிழகத்தில் உள்ள கணிசமான மக்களுக்கு மகாவீரர் யார், அவர் ஏன் உயிர்களைக் கொல்லாமை பற்றி போதித்தார் என்பது பற்றி எல்லாம் தெரியவில்லை என்பதால் எதற்காக இந்த தடை என்று தெரியாமல் புலம்புவதை பார்க்க முடிகிறது. அரசு இது தொடர்பாக உரிய விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டால் விழிப்புணர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதனிடையே, மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ., டிஆர்பி ராஜா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் Dear #Chennai 4.11.21 அன்று மன்னார்குடி யில் அனைத்து இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு தீபாவளி அன்று காலை கறி குழம்பு மதியம் விரால் மீன் வருவல் + குழம்பு இரவு ரத்தப் பொரியல் ஆட்டுக்கால் பாயா அனைத்தும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications