இன்னும் 2 வருஷம் இருக்கு! ஆலோசித்து முடிவு எடுக்கலாம்! ஓபிஎஸ்க்கு நேரடியாக பதிலளித்த துரைமுருகன்
சென்னை : முல்லை பெரியாறு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் ஜீவாதாரமாக உள்ளது. மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்கிறது இந்த அணை.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றது எனவும் அதனை இடிக்க வேண்டும் என கேரளா பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அதே நேரத்தில் அணை உறுதியாக உள்ளதாகவும் அணையின் பாதுகாப்பு குறித்து எந்த அச்சமும் தேவையில்லை என தமிழக அரசு கூறி வருகிறது.

முல்லை பெரியாறு விவகாரம்
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக காங்கிரஸ்,பாமக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வது போன்ற பணிகளை செய்கிறது. இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும், கேரள அரசுடன் நல்ல நட்பு முதல்வருக்கு இருப்பதால், அந்த நட்பை பயன்படுத்தி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திமுக சார்பாக கம்பம் ராமசந்திரன் பேசும் போது, தமிழகத்தின் உரிமை நிலைநாட்ட வேண்டும் என்றார். இதை தொடர்ந்து பேசிய பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, இருமாநில அரசின் நல்லுறை பேணும் வகையில் கேரளா அரசு செயல்படுவதோடு, 152 அடியாக முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை உயர்த்த அரசு நடவடிக்கை என்றும் வலியுறுத்தினார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
மேலும், காங்கிரஸ் கட்சி சார்பாக பேசிய செல்வ பெருந்தகை, முல்லை பெரியாறு விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். இதே போல சிபிஎம் சார்பாக நாகை மாலி, சிபிஐ தளி ராமசந்திரன் ஆகியோரும் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அனைத்து அணைகளின் பாதுகாப்பது ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகிறது என்றார்.

அடுத்தகட்ட நடவடிக்கை
மேலும், இச்சட்டம் வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றார். ஆனால், இந்த சட்டத்தின் சரத்துகளின் படி அணையை பராமரிப்புது நம்மிடம் கொடுத்துள்ளதாகவும், இந்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்ததாவும் கூறினார். எனவே முல்லை பெரியாறு விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications