23 மாசமா கும்பகர்ணன் போல் தூங்கிவிட்டு இப்போது கேட்கிறீர்களா?.. எடப்பாடிக்கு எ.வ.வேலு பதிலடி!
சென்னை: 15 நாட்களில் கோயம்பேடு மேம்பாலப் பணிகள் முடிவடையும் என பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயம்பேட்டில் மேம்பாலப் பணிகள் ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் 29.09.2015ல் துவக்கப்பட்டது. இப்பணி 28.06.2018-க்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்தும் பணிகள்
இந்த உயர்மட்ட மேம்பாலப் பணியுடன் சேவை சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியும் முழுமையாக நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் ஆட்சியில் 2018 வரை எதுவும் நடைபெறவில்லை. இந்த சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் 18.07.2021, 18.09.2021ல் பார்வையிட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கினேன். நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு (மனு எண். 123/2021) மனுவை அரசின் சார்பாக முயற்சி செய்து சாதகமான தீர்ப்பினை 29.09.2021ல் தான் தளபதி அரசு பெற்றது. அதில் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தையும், ஆக்கிரமிப்புகளையும் சில தினங்களுக்கு முன் தான் அகற்றினோம். இப்பணிகள் எதனையும் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக காலத்தை வீனாக கடத்தியது உங்கள் அரசு தான். இறுதி கட்ட பணிகளை தளபதி அரசு 31.10.2021க்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோயம்பேடு மேம்பாலம் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்ததாரர்
மேலும் வேளச்சேரி புறவழிச்சாலையில் 29.06.2012 அன்று ரூ.108 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது. மூன்று ஆண்டு கால தாமதத்திற்குப் பின்னர் 23.12.2015ல் ஒப்பந்தகாரர் பணியினை துவக்கினார். இந்த பணி ஒப்பந்தப்படி 22.09.2018ல் முடித்திருக்க வேண்டும். பணியினை முடிக்க வேண்டிய காலம் முடிந்த பின்னர் 23 மாதங்கள் கும்பகர்ணனை போல உறக்க நிலையில் இருந்தது உங்களுடைய ஆட்சி தான். தளபதி அரசு பொறுப்பேற்ற பின் பொதுப்பணித்துறை அமைச்சர் என்கின்ற முறையில் அப்பணிகளை 18.07.2021ல் நானே நேரடியாக களத்தில் ஆய்வு செய்தேன். வேளச்சேரி மேம்பாலப்பணியின் இரண்டாம் அடுக்கினை 31.10.2021க்குள்ளும் முதல் அடுக்கினை 31.12.2021க்குள்ளும் முடிக்கும்படி அதிகாரிகளுக்கும் ஒப்பந்தக்காரருக்கும் அறிவுரை வழங்கினேன்.

மேடவாக்கம்
இரண்டாம் அடுக்கு இம்மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். மேடவாக்கம் மேம்பாலப்பணி மதிப்பீடு ரூ.133.10 கோடியில் 14.08.2015ல் வழங்கப்பட்டது. இப்பணிக்கான உத்திரவு 08.01.2016ல் சன்ஷைன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஒப்பந்தக்காரர் பணியினை செயல்படுத்துவதில் மெத்தனமாக இருந்ததால் ஒப்பந்தம் 14.08.2018ல் ரத்து செய்யப்பட்டது. மறுபடியும் ஒப்பந்தம் கோரி ரெனாட்டஸ் நிறுவனத்திற்கு 12.12.2018ல் பணி உத்திரவு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் 12.09.2020க்குள் பணியினை முடித்திருக்க வேண்டும். ஆனால், இப்பணி முடிக்கப்படவில்லை. இதற்கு பின்னர் 8 மாத காலம் ஆட்சியில் இருந்தது நீங்கள் தான்?

அதிகாரிகள்
மேற்கண்ட மேடவாக்கம் சாலை மேம்பாலப் பணிகளை 18.07.2021 அன்று நானே நேரடியாக பார்வையிட்டேன். மேடவாக்கம் சாலை மேம்பாலப் பணியினை 31.12.2021க்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளேன். ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி அரசு தான். இன்று போக்குவரத்து நெரிசலை குறைத்ததிட சாலை மேம்பாலப்பணிகள் கால தாமதமாக நடைபெறுவதாக நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications