திமுக லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே போராட்டம்.. திட்டமிட்ட தூண்டல்.. ஜெயக்குமார்
சென்னை: திமுகவின் லியோனியின் கூட்டத்திற்கு பின்னரே சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் தொடங்கியது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த 14-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு தினங்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டசபை கூடியது.
இதில் பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்... அருமையான பந்து.. கோல் அடிக்காமல் கோட்டைவிடும் எடப்பாடியார்!
விளக்கம்
இந்த நிலையில் ஸ்டாலின் பேசுகையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் தடியடியை தூண்டிவிட்டது யார். வண்ணாரப்பேட்டைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
போராட்டம்
அவர் கூறுகையில் வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி மாநிலம் முழுவதும் போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர். சில விஷமிகள் போராட்டத்தை தூண்டிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அது போல் காவலர்கள் மீது செருப்பு, கற்கள், பாட்டில்கள் வீசப்பட்டன என்றார். இதை ஏற்க மறுத்து திமுக வெளிநடப்பு செய்தது.
திண்டுக்கல் லியோனி
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் பிப்ரவரி 14-ஆம் தேதி திண்டுக்கல் ஐ லியோனியின் பொதுக் கூட்டம் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர்தான் போராட்டம் தொடங்கியது. எனவே இந்த போராட்டம் திட்டமிட்டு தூண்டப்பட்டுள்ளது என்றார். இதற்கு திண்டுக்கல் லியோனி மறுப்பு தெரிவித்தார்.
திண்டுக்கல் லியோனி மறுப்பு
இதுகுறித்து லியோனி கூறுகையில் உரிமை பறிக்கப்படும்போது போராடுவது தவறில்லை. போராட்டத்தை தூண்டிவிடும் வகையில் பேசவில்லை. நான் பேசியது யூடியூப்களில் வீடியோவாக பதிவாகியுள்ளது. அதை கேட்டாலே நான் போராட்டத்தை தூண்டினேனா என்பது தெரியவரும் என திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்தார்.