பவுர்ணமியில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பகுத்தறிவு திமுக: முன்னாள் ஜெயக்குமார் கிண்டல் !
சென்னை: பகுத்தறிவு பேசும் திமுக, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பவுர்ணமி நாளாக பார்த்து அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொற்காலம். திமுக ஆட்சி கற்காலம்.
தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளி வீசினர். நீட் தேர்வு இருக்காது, மாதம் ஒருமுறை மின்சார கணக்கு , மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை போன்ற பல வாக்குறுதிகளை அளித்தனர்.
சட்டசபை ஜால்ரா சபையாகிவிட்டது! திமுக அமைச்சர்களில் பாதிபேர் அதிமுக! கேஜிஎப் டயலாக் பேசிய ஜெயக்குமார்
கொடுத்த வாக்குறுதிகள்
கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது ஒன்றை நிறைவேற்றியுள்ளதா இந்த திமுக அரசு? மக்கள் வெறுத்துப் போயுள்ளனர். இந்த ஆட்சி நம்பிக்கை மோசடி செய்ததாக மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். 2024 லோக்சபா தேர்தலில் இதெல்லாம் வெளிப்படும். பகுத்தறிவு பேசும் திமுக, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பவுர்ணமி நாளில் பார்த்து அறிவித்துள்ளது.
திமுக ஆட்சி
ஓராண்டு திமுக ஆட்சியின் மதிப்பீடு ஆனது, நாங்கள் (அதிமுக) ஹீரோவாகவும், இவர்கள் (திமுக) ஜீரோவாகவும் இருக்கின்றனர். அம்மா உணவகங்களை படிப்படியாக குறைத்து கருணாநிதி பெயரில் உணவகம் திறக்க முயற்சிக்கின்றனர். மகளிருக்கு இருசக்கர வாகனம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என அனைத்தையும் மூடிவிட்டனர்.
ஜெயலலிதா ஆட்சி காலம்
இப்படியான ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் நிறைவேற்றிய நல்ல திட்டங்களை எல்லாம் முடித்து வைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார். மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 6 இடங்களுக்கு போட்டி நடைபெறுகிறது.
மொத்தம் 6 எம்பி பதவிகள் காலி
அந்த 6 இடங்களில் திமுக 3 இடங்களிலும் திமுகவின் கூட்டணியான காங்கிரஸ் ஒரு இடத்திலும் அதிமுக இரு இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்றைய தினம் வெளியானது. அதிமுக சார்பில் உள்ள இரு இடங்களில் ஒரு இடத்தில் ஜெயக்குமார் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.