இர்ஃபான் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுப்போம்.. இந்தியா வந்ததுமே.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
சென்னை: "யூடியூபர் அதிகபட்ச தண்டனை வழங்க தமிழக அரசு வலியுறுத்தும். இர்பான் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளஇர்ஃபானுக்கு து." என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபரான இர்ஃபான் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. தனது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிவித்து சர்ச்சையில் சிக்கினார் இர்ஃபான். இந்நிலையில் அண்மையில் மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை தானே கத்திரிக்கோலால் வெட்டிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார் இர்ஃபான்.

மேலும், பிரசவத்திற்கு முன்பான மருத்துவமனையில் நடந்தது அத்தனையையும் வீடியோவாக வெளியிட்டிருந்தார் இர்ஃபான். இர்ஃபானின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை அறைக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு. இதில், எந்தவித மருத்துவ பயிற்சியும் இல்லாமல் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபமாக வெடித்த நிலையில், யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இஃர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இர்ஃபான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இர்பான் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தனது மனைவியின் பிரசவத்தின்போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய யூடியூபர் இர்பான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். இர்பான் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இங்கு வந்ததும் நடவடிக்கை தொடரும்.
யூடியூபர் இர்பானுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க தமிழக அரசு வலியுறுத்தும். அந்த வகையில் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு தவறான விஷயம் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இர்பான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. பிரசவம் நடைபெற்ற சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரூ. 50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications