பிரியா மரணம்.. குஜராத் போல் கடவுளின் செயல் என தப்பிக்கவில்லை.. அண்ணாமலைக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி!
சென்னை: கால்பந்து வீராங்கனையும், மாணவியுமான பிரியா உயிரிழப்புக்கு கடவுளின் விதி என்று கூறி தப்பிக்க முயலாமல், தமிழக அரசு தவறை ஒப்புக்கொண்டு சரியான நடவடிக்கையை எடுத்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு விரைந்து மழைநீரை வெளியேற்றியது. அதேபோல் மழை காலத்தில் மக்கள் காய்ச்சல் உள்ளிட்டவைகளால் பாதிக்காமல் இருக்க, மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. சென்னை கோட்டூர்புரம் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொது மக்களுக்கு கொசு வலைகளை வழங்கினார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் நீர் வழி தடங்களுக்கு அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு 2.60 லட்சம் கொசு வலைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலைகள் வழங்கப்பட உள்ளது.

இதுவே முதல்முறை
பருவமழை காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்த் தொற்றுகளை தடுக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 55 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருவதாக தெரிவித்தார்.

மருத்துவர்கள் மீது நடவடிக்கை
தொடர்ந்து மாணவி பிரியா உயிரிழப்பு தொடர்பான கேள்விக்கு, மாணவி பிரியா உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட பிறகே உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவர்களின் முதல் கட்ட அறிக்கையை வைத்து தான் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விரைவில் இறுதி அறிக்கை
மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை காவல்துறை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் மாணவி உயிரிழந்தார் என்பதை தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு பதிலடி
தொடர்ந்து, சுகாதாரத்துறை சீரழிந்திருப்பதாக அண்ணாமலை விமர்சனம் பற்றிய கேள்விக்கு, இது அரசியலுக்காக சொல்லப்படுகிறது. நான் பதிலளிக்க தயாராக இல்லை. அண்மையில் குஜராத் மாநிலத்தில் தொங்கு பால விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த போது 'இது கடவுளின் செயல்' எனக் கூறி தப்பித்தது போன்று நாங்கள் செயல்படவில்லை.

உண்மையை அறிவிப்போம்
மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக இது நடைபெற்றது என்ற தவறை உடனே தெரிவித்து அதற்கு தீர்வு என்ற அடிப்படையில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அதனை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். உண்மையை உலகறிய அறிவிப்போம்" இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்












Click it and Unblock the Notifications