“காந்தி கொலை” நினைவிருக்கா? ஆர்எஸ்எஸ் பேரணி தேவையில்ல.. “மதவெறுப்பு” - விளாசிய அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை: காந்தி கொலை வழக்கில் 8 வது நபராக சேர்க்கப்பட்டவரை தேசத் தந்தையாக சித்தரிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெறுப்பை கக்கி வருவதாகவும் அவர்களின் அணிவகுப்பு ஊர்வலம் தேவையற்றது எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிடகோரி சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அண்மையில் உத்தரவிட்டது.
காந்தி பிறந்தநாளும், அம்பேத்கர் நினைவுநாளுமான அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டின் 51 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.
'மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவு'.. இதோ நானும் பார்க்க கிளம்பிட்டேன்.. நட்டாவை விடாத மனோ தங்கராஜ்!
அமைச்சர் மனோ தங்கராஜ்
இந்த நிலையில் நேற்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் சாதி, மதம் தொடர்பாகவோ, தனி நபர் குறித்தோ தவறாக பேசக் கூடாது, மோதலை தூண்டக்கூடாது என உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை அமைச்சர் மனோ தங்கராஜிடம் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தேவையற்ற செயல்
இதற்கு பதிலளித்த அவர், "நீதிமன்றங்கள் இன்று சில நேரங்கள் சில கருத்துக்களை சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் ஒன்றும் கூறவிரும்பவில்லை. ஆனால், சட்டம் ஒழுங்கு எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும் கடமை திமுக அரசுக்கு உள்ளது. சட்டம் ஒழுங்கை முதலமைச்சர் பார்த்துக்கொள்வார். தனிப்பட்ட முறையில் சொல்லப்போனால் மத அடிப்படையில் இப்படிப்பட்ட செயல்களை செய்வது தேவையில்லாத ஒன்று.
ஆர்.எஸ்.எஸ்.
உண்மையாக ஆன்மீகம் பேசுபவர்கள் வெறுப்பை பேசக்கூடாது. அவர்கள் அன்பை பற்றி பேச வேண்டும். ஆனால், இன்று ஆர்.எஸ்.எஸும் பாசிச கும்பல்களும் வெறுப்பை கக்கி வருகிறார்கள். அது பிரிவினையை ஏற்படுத்துவதற்கான முயற்சி. இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று அமைதியாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் தடிகளோடு சிலர் சுற்றுவது தேவையில்லாத ஒன்று. இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்." என்றார்.
மேல்முறையீடு
நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யுமா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "அதை முதலமைச்சர்தான் முடிவு செய்வார். பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். கும்பலும் வன்முறையை ஏற்படுத்துவதற்கும், மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்குவதற்கும் திட்டமிடுகிறார்கள் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
காந்தி கொலை வழக்கு
காந்தியின் கொலை வழக்கில் 8 வது நபராக இருந்தவரை தேசத்தந்தை என்று சித்தரிக்கும் துணிச்சல் அவர்களுக்கு வந்திருக்கிறதென்றால் இந்திய துணைக்கண்டத்தில் வாழும் மக்கள் அவர்களை எந்த சூழலிலும் ஏற்கக்கூடாது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்." என்றார்.