அப்பா..மகன்..அத்தை! திமுக குடும்ப அரசியலா? அதை நீங்க சொல்லக்கூடாது! தமிழிசையால் சூடான ’சீனியர்’!
சென்னை : திமுகவில் குடும்ப அரசியல் குறித்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியிருந்த நிலையில், குடும்ப அரசியல் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுவது வேடிக்கையாக இருப்பதாக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அமைச்சர் நாசர் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய பொதுக்குழு கூட்டம் நேற்று முன் தினம் சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள செயின் ஜார்ஜ் பள்ளி விங்ஸ் கான்வென்ட்சன் சென்டரில் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 4ஆயிரம் நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால் இரண்டாவது முறையாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

கனிமொழி
இதேபோல் மேலும் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் பொருளாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டனர். மேலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி திமுக துணை பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்த பதவியில் கனிமொழி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

துணை பொதுச் செயலாளர்
திமுகவில் முக்கியமான தலைவராக கனிமொழி இதுவரை இருந்தாலும் மகளிர் அணி செயலாளர் என்ற பொறுப்பை தாண்டி பெரிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்து நிலையில் துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பதை திமுகவினர் பலரும் வரவேற்றனர். இந்நிலையில் அப்பா..மகன்..அத்தை என திமுக பொதுக்குழுவில் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன.

தமிழிசை சவுந்திரராஜன்
இந்நிலையில் இதுகுறித்து பேசியிருந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசுகையில் ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான், அதற்கு எனது பாராட்டுக்கள். அண்ணன் தலைவர், தங்கை துணை பொதுச்செயலாளர் என வாரிசு அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பொதுமக்கள் எண்ணும் நிலை உள்ளது. யார் எப்படி இருந்தாலும் ஒரு பெண் பதவிக்கு வந்துள்ளதற்கு எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியிருந்தார்.

அமைச்சர் நாசர்
இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வந்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் குடும்ப அரசியல் குறித்து பேசுவது வேடிக்கையாக இருப்பதாக அமைச்சர் சா.மு.நாசர் பதிலடி கொடுத்துள்ளார். ஆவடியில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபின் பேசிய அவர்,"தமிழிசை சவுந்தராஜனின் குடும்பத்தினர் பல்வேறு கட்சிகளில் பல்வேறு பதவிகளில் இருக்கின்றனர். திமுகவினர் ஒரே கொள்கை உடையவர்கள். ஒரே கொள்கை உடையவர்கள் ஒரே குடும்பத்தில் இருந்து ஒரே கட்சியில் பதவிக்கு வருவது எந்தத் தவறும் இல்லை. அதிமுக ஆட்சியில் பல்வேறு பொய் வழக்குகள் போட்டு மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோது உடன் இருந்தவர் கனிமொழி. திமுகவிற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர் கனிமொழி எனவும் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications