தங்க மாட்டில் பால் கறந்து குடிக்கிறார் அமைச்சர் நாசர்.. அதான் இது தெரியல போல - அண்ணாமலை சாடல்!
சென்னை : அமைச்சர் நாசர் தங்க மாட்டில் பால் கறந்து குடித்துக்கொண்டு இருப்பதால்தான் என்னைப் போன்ற சாமானியர்கள் ஆவின் பால் வாங்குவார்களா இல்லையா என்று கூட அவருக்குத் தெரியவில்லை என விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
Recommended Video
கடந்த சில நாட்களாக ஆவின் பால் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசரின் தொகுதியான ஆவடியில் இன்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
அப்போது பேசிய அண்ணாமலை, தன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் பதவியில் நீடிப்பது குறித்து அமைச்சர் நாசர் தான் முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நாசர்
ஆவின் பால் பாக்கெட்களில் அளவு குறைந்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், பொய் கூறுவதையே தொழிலாக வைத்துள்ளதாக அண்ணாமலையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் விமர்சித்தார். இது இரு தரப்பினர் இடையே கருத்து மோதலை உருவாக்கியிருந்த நிலையில் இன்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணி நடைபெற்றது.

திமுகவிற்கு கோரிக்கை
இந்தப் பேரணியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். ஆவடி சிக்னல் அருகே அமைந்துள்ள காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறுகையில், "வரப்போகும் 75வது சுதந்திர தினத்தை முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வழிவகை செய்யுமாறு தமிழக அரசுக்கும் திமுகவினருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.

அமைச்சர் பதவியில் இருந்து
மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் வெளியாவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆவின் சங்கங்களை சேர்ந்தவர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆவடி தொகுதியில் அமைச்சராக வலம் வரும் நாசர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் அமைச்சர் பதவியில் அவர் இருப்பது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

தங்க மாட்டில் பால்
பால்வளத்துறை அமைச்சர் நாசர் தங்க மாட்டில் பால் கறந்து குடித்துக்கொண்டு தங்கத்தட்டில் உணவருந்திக் கொண்டிருப்பதால்தான் என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் ஆவின் பால் வாங்குவார்களா இல்லையா என்று கூட அவருக்குத் தெரிவதில்லை. நாசர் சம்பாதித்த பணத்தில் கொழித்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் சாமானிய மக்களாக உள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications