சென்னையில் 98% இயல்பு நிலை திரும்பியது! இன்னும் மழை வந்தாலும் சமாளிப்போம்! அமைச்சர் சேகர் பாபு உறுதி
சென்னை : சென்னையில் 98 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டது எனவும் மீண்டும் மழை வந்தாலும் சமாளிக்க தயாராக இருப்பதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தலைநகரான சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கனமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி காட்சியளித்தது. பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

வடிகால் பணிகள்
இந்நிலையில் சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள குக்ஸ் சாலையில் நடைபெற்று வரும் மழை நீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் மழைக்கால காய்ச்சல் தடுப்பு மற்றும் சிகிச்சை முகாமையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் 98 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டது. மீண்டும் மழை வந்தாலும் சமாளிக்க தயாராக இருக்கிறோம்

அமைச்சர் சேகர் பாபு
சென்னையில் 156 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும் சுகாதார துறையும் சேர்ந்து சென்னையில் 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மருத்துவ முகாம்கள்
அரசுத்துறை ஒருபுறம் என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மண்டல தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர். முடிந்த அளவு மழையை சமாளித்து இருக்கிறோம். வருகின்ற ஒன்பதாம் தேதி மீண்டும் மழை பெய்யும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்படி மழை வந்தாலும் அதனை சமாளிப்பதற்கு உண்டான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடந்த ஐந்து நாட்களாக எங்கெங்கு மழை பெய்தது என்பதை குறித்து வைத்திருக்கிறோம்.

மழை நீர் தேங்காது
அந்தப் பகுதிகளில் நேரடியாக சென்று பார்த்து இருக்கிறோம். சென்னையில் சில இடங்களில் நேற்று இரவு வரை மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். சென்னை மாநகரில் 200 கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாக 156 கிலோ மீட்டர் அளவுக்கு மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதம் இருக்கின்ற 44 கிலோ மீட்டர் பணிகளையும் உடனடியாக துவக்குவதற்கு முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இரண்டாம் கட்டமாக முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மழை முடிந்த பிறகு தை மாதத்தில் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படும். அந்தப் பணிகள் நிறைவுற்றால் அடுத்த பருவ மழையின் போது சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications