இஸ்லாமியர்களுக்காக போராடி வாழ்க்கையில் முதல்முறை கைதானேன்! இப்தார் விழாவில் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, தனது அரசியல் வாழ்வில் முதல்முறையாக தாம் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இப்தார் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

பாஜகவின் அடிமையான அதிமுகவை வீட்டுக்கு அனுப்பியது போல் இப்போது பாசிஸ பாஜகவை மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்றி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
பாஜகவை இன்னும் வலிமையாக எதிர்க்க வேண்டியிருப்பதால் முதலமைச்சர் ஸ்டாலினின் கரத்திற்கு இஸ்லாமியர்கள் வலு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதிமுக, பாஜகவை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் உதயநிதி சூசகமாக விமர்சித்தார். டிடிவி தினகரன் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என கிண்டல் செய்தார்.

திமுகவை பார்த்தால் சிலருக்கு வயிற்றெரிச்சல் வரத்தான் செய்யும் என்றும் அதற்கு தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் பேசினார்.
சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு மாதத்திற்கு 2 முறையாவது தாம் வந்துவிடுவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தன்னை அழைத்து வந்துவிடுவதாகவும் கூறினார்.

தேர்தல் வந்தால் மட்டுமே மக்களிடம் வரக் கூடிய இயக்கம் அதிமுக என்றும் ஆனால் எப்போதுமே மக்களிடம் வந்து மக்களுக்காக மக்கள் நலப் பணிகளை ஆற்றக் கூடிய இயக்கம் திமுக எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக பல்வேறு இப்தார் விழாக்களில் கலந்துகொண்டு வரும் உதயநிதி, அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் இன்று நடைபெறும் இப்தார் விழாவிலும் கலந்துகொள்கிறார்.












Click it and Unblock the Notifications