"என் ஆருயிர் அண்ணா!" "இடியை இறக்கிவிட்டீர்களே" மு.க.முத்து மறைவுக்கு ஸ்டாலின் உருக்கமான இரங்கல்
சென்னை: முன்னாள் முதல்வர் மு.க.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானதை அடுத்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேராக சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின், அவருக்கு இரங்கல் செய்தியையும் வெளியிட்டுள்ளார். அதில் "எனது ஆருயிர் அண்ணன்" என அழைத்து பல்வேறு நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.

தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர் அவர்கள். தலைவர் கலைஞரைப் போலவே இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் அண்ணன் முத்து அவர்கள்.
நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத் துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.
பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு ரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து அவர்கள்.
பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா' என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க' என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.
என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க.முத்து. என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன். இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி- பத்மாவதி தம்பதியின் மகன் மு.க. முத்து இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) July 19, 2025
தந்தை முத்துவேலர்… pic.twitter.com/4pXuTAKjf1
இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது. இதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. நடிப்பு திறன் மட்டுமின்றி பல்வேறு படங்களில் தனது சொந்த குரலில் பல்வேறு பாடல்களையும் பாடி அசத்தியுள்ளார்.
எம்ஜிஆருக்கும் மு.க.முத்துவுக்கும் இடையே போட்டி இருந்ததாக சொல்லப்பட்டாலும் அவர்கள் இருவரும் அன்பு கொண்டவர்கள். "பிள்ளையோ பிள்ளை" படப்பிடிப்பை எம்ஜிஆர் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். கருணாநிதியுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அரசியல் இருந்து முத்து விலகி இருந்து வந்தார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த மு.க.முத்துவின் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் போய் அஞ்சலி செலுத்தினார். தற்போது முத்துவின் உடல் கோபாலபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications