அன்னிக்கே ரஜினி சொல்லிட்டாரே.. நொறுங்கிய எதிர்ப்பு, கனிகிறது காலம்.. தனிபெரும் தலைவராகிறார் ஸ்டாலின்
முக ஸ்டாலின் தனிப்பெரும் தலைவராக உருவாகி கொண்டிருக்கிறார்
சென்னை: வெளி வரும் கருத்துக் கணிப்புகளை பார்த்தால் நமக்கு ரஜினி ஞாபகம்தான் வருகிறது. "ஒருத்தரை பத்து பேர் எதிர்த்தா உண்மையில் யார் பலசாலி".. என்று அன்று ரஜினி கேட்டாரே.. அதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த அளவுக்கு தன்னை ஒரு தனிப்பெரும் தலைவராக மாற்றிக் கொண்டு நிரூபித்து விட்டார் மு.க..ஸ்டாலின் என்றுதான் சொல்ல வேண்டும்.
கருணாநிதிக்குக் கூட இத்தனை எதிர்ப்புகள் இருந்திருக்காது. ஆனால் ஸ்டாலினுக்குத்தான் எத்தனை எத்தனை எதிர்ப்புகள்.. சொந்தக் கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகள் நிறைய.. பல தலைவர்கள் ஸ்டாலினை முழுமையாக ஏற்காத நிலையும் இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை...
வெளியில் பார்த்தால் ஒரு பக்கம் அதிமுக, மறுபக்கம் பாஜக, இன்னொரு பக்கம் பாமக, இந்தப் பக்கம் கமல்ஹாசன், அந்தப் பக்கம் சீமான்.. இப்படி ரவுண்டு கட்டி எதிர்ப்புகள் ஜாஸ்தி. என்ன ஆச்சரியம் என்றால் வழக்கமாக எதிர்க்கட்சிகள் இணைந்து ஆளுங்கட்சியை எதிர்த்து கொடி பிடிப்பார்கள்.
சீமான்
ஆனால் தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு நேர் விரோதமாக எதிர்க்கட்சிகளான பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் திமுகவை எதிர்த்துக் கொண்டுள்ளன. இது வினோதமான சூழல் ஆகும். ஆளுங்கட்சியை தோற்கடிப்போம் என்று கூற வேண்டிய கட்சிகள் திமுகவை வீழ்த்துவோம் என்று கூறுகின்றன. இந்த வித்தியாசமான கோஷத்தை உருவாக்க வைத்ததே ஸ்டாலினுடைய முதல் வெற்றிதான்.
கூட்டம்
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக முதல் நாம் தமிழர் வரை ஒன்றுபட்டு எதிர்க்கக் கூடிய தலைவராக ஸ்டாலின் உருவெடுத்துள்ளார் என்பதே உண்மை. ஒரு தலைவரை எதிர்த்து பெரும் கூட்டமாக பலரும் திரண்டு வந்தால் நிச்சயம் அந்த தலைவர் வலிமையானவராக மட்டுமே இருக்க முடியும். அந்த வகையில் ஸ்டாலின் வலுவான ஒரு தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்றுதான் கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போதும் தெரிகிறது.
கிண்டல் - கேலி
உண்மையில் ஸ்டாலின் தனக்கான இடத்தை அடையவும், அடைந்த பின்னர் அதைத் தக்க வைக்கவும், தக்க வைத்துக் கொண்ட பின்னர் அதை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், நிறையவே மெனக்கெட்டுள்ளார். உழைத்துள்ளார். அதை மறுப்பதற்கில்லை. அவரது பேச்சுக்களை வைத்து பலர் கிண்டல் அடித்தாலும் கூட அதை சற்றும் பொருட்படுத்தாமல் தனது பாதை, தனது இலக்கு ஆகியவற்றில் அவர் தெளிவாகவே இருக்கிறார். அதனால்தான் திமுகவின் வாக்கு வங்கி கொஞ்சம் கூட சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்கிறது. சற்று கூடுதலாகவும் மாறியிருக்கிறது. இது மிகப் பெரிய சாதனைதான்.
ஒற்றை தலைமை
ஜெயலலிதா என்ற ஆளுமைக்குப் பிறகு அதிமுக நிலை குலைந்து போய் விட்டது உண்மை. ஒற்றைத் தலைமையை அக்கட்சியால் உருவாக்க முடியவில்லை. அமைச்சர்களை இஷ்டத்திற்கு நீக்கி சேர்க்க முடியாத நிலையிலும் அந்தக் கட்சி இருந்தது. புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. காரணம் எதைச் செய்தாலும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்ற நிலை இருப்பதால். ஆனால் திமுகவில் அப்படி இல்லை. கருணாநிதி என்ற ஆளுமைக்குப் பிறகும் திமுக வழக்கம் போல செயல்பட முடிகிறது. அதற்குக் காரணம், அங்கு தலைமையில் சிக்கல் இல்லை என்பதால்தான்.
அதிருப்திகள்
மேலும் திமுகவை பிளக்கும் வேலைகளும் கூட நடக்கத்தான் செய்தன. அதிகபட்சம் குக. செல்வம், விபி. துரைசாமி போன்ற மக்களிடையே பிரபலமாக இல்லாதவர்களைத்தான் வெளிக் கொண்டு வர முடிந்ததே தவிர பெரிய அளவில் திமுகவுக்குள் பிரளயத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதற்குக் காரணம் ஸ்டாலின் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை தெளிவாக இருக்கிறார்கள். நாம் யார், நமது இலக்கு என்ன, நாம் என்ன செய்ய வேண்டும், எதிரி எந்தப் பக்கமிருந்து தாக்குவான், எப்படித் தாக்குவான் என்பதை முழுமையாக புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். இதிலும் ஸ்டாலினுடைய முதிர்ச்சி தெளிவாக நிரூபணமாகியுள்ளது.
நிரூபணம்
கருத்துக் கணிப்புகள் பலவும் கூட திமுக 150 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றுதான் சொல்கின்றன. உண்மையில் அப்படி நடந்தால் அது திமுகவுக்கு மட்டுமல்ல, ஸ்டாலினுடைய தலைமைத்துவத்திற்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படும். இங்கும் நமக்கு ரஜினி சில காலத்துக்கு முன்பு பேசிய ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது.. "ஸ்டாலினுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை.. அவர் தன்னை நிரூபித்தாக வேண்டும்".. இன்று ஸ்டாலின் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.. ரஜினிதான் பாவம் பாதியிலேயே போட்டியை விட்டு விலகிப் போய் விட்டார்.!