ஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. "அது" நடக்குமா?!
முக ஸ்டாலின், ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்
சென்னை: யாருமே சொல்லாத, சொல்ல முடியாத ஒரு விஷயத்தை ராகுலிடம் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.. இந்திய அரசியலில் இது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 140 வருட பழமை வாய்ந்த கட்சிக்கு ஒரு தலைவர் இல்லை.. தேசிய அளவில் காங்கிரசுக்கு இது ஒரு பிரதான பிரச்சனையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
சோனியா காந்தி மட்டும் உடல்நலம் தேறி, பொறுப்பில் இருந்தால், இந்த கட்சி இப்படி சிதைந்து போயிருக்காது.. இடைக்கால தலைவர் பதவியில் அவர் இருப்பதால் பெரிதளவு எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் தான் உள்ளது. எனவே ராகுல் காந்தியே இந்த தலைமை பொறுப்பினை ஏற்றிருக்கலாம்.
சோனியா காந்தி
அதிருப்திக்கு உள்ளான அந்த 23 மூத்த தலைவர்களையும் சோனியா காந்தி சமாதானப்படுத்தினாரா? அல்லது அதற்கான முயற்சிகள் கைகொடுத்ததா என்று தெரியவில்லை.. ஆனால் சம்பந்தப்பட்ட 23 பேரும், தலைவரை தேர்ந்தெடுங்கள், அது ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி என்றுதான் சொல்கிறார்கள்.. அந்த வகையில் ராகுலுக்கு எந்தவித எதிர்ப்பும் பெரிதாக அகில இந்திய அளவில் இல்லை என்றுதான் தெரிகிறது.
குறைகள்
அதேபோல, மற்ற மாநிலங்களிலும், ராகுலை எந்த தலைவர்களும் குறையே சொன்னது கிடையாது.. ஏன் ஒவ்வொரு முறை தேர்தலிலும் தோற்றுவிட்டீர்கள் என்று கேள்வி எழுப்பியதும் கிடையாது.. அந்த வகையில் யாருடைய அதிருப்தியையும் இதுவரை ராகுல் நேரடியாக பெறவில்லை என்பதும் தெளிவாகிறது.
ராஜினாமா?
அப்படியானால் ராகுலுக்கு என்னதான் பிரச்சனை? இவர் ஏன் பதவியை ராஜினாமா செய்தார்? இப்போது எதற்காக பதவியை ஏற்காமல் இருக்கிறார்? வளர்ந்து வரும் பாஜகவுக்கு இணையாக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முடிவை ஏன் இன்னமும் எடுக்காமல் இருக்கிறார் என்ற கேள்விதான் எழுகிறது. இதைதான் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஸ்டாலின்
ராகுல் சென்னை வந்தபோது, "தேசிய அளவில் வலுவான கூட்டணி அமையுங்கள்.. மத்திய அரசு மாநிலங்களுக்கு இழைக்கும் கலாச்சார அநீதியை தடுக்க தமிழ்நாட்டில் தனது தலைமையில் உள்ள கூட்டணிப்போல, தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான ஒரு கூட்டணியை அமையுங்கள்.. இந்தியாவில், வகுப்புவாத, பாசிச சக்திகளால் மூச்சு திணறல் ஏற்படுகிறது.. அதற்கு எதிராக நாட்டை பாதுக்காக்க ராகுல் காந்திக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
பாஜக
கிட்டத்தட்ட இது ராகுலுக்கு தந்த அட்வைஸ் போலதான்.. ஸ்டாலின் சொன்னது மிக சரியே.. வளர்ந்து வரும் பாஜகவுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்றால், மதச்சார்பற்ற கூட்டணி வலிமை பெற வேண்டும் என்றால், ஸ்டாலினின் இந்த கூற்று ஏற்கத்தக்கதே.. காங்கிரஸ் கட்சியிலேயே பல மூத்த தலைவர்கள் சொல்லாத ஒரு விஷயத்தை ஸ்டாலின் பேசியிருப்பதை, முக்கியத்துவத்துடன் பார்க்க வேண்டி உள்ளது.
தமிழகம்
ராகுல் இந்த நேரத்தில் துணிவான ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.. இந்த 3 மாதமாக ராகுல்காந்தியின் தமிழகம் வருகையானது பல நல்ல மாற்றத்தை தமிழக காங்கிரசுக்கு ஏற்படுத்தி உள்ளது.. மக்கள் மனதில் ராகுலின் செயல்பாடுகள் பதிந்துள்ளன.. ராகுலை மக்களுக்கு பிடித்திருக்கிறது.. இதுபோல இன்னும் 3, 4 முறை ராகுல் தமிழகம் வந்து சென்றால், நிச்சயம் காங்கிரஸ் மீதான அதிருப்தி குறைய வாய்ப்பு அமையும்.
காங்கிரஸ்
ஒரு மாநிலத்திலேயே இப்படி என்றால், அகில இந்திய அளவில் பொறுப்பேற்றால், வீழ்ந்து கிடக்கும் காங்கிரஸை செங்குத்தாக தூக்கி நிறுத்த முடியும்.. பாஜகவுக்கு மாற்றாக இல்லாவிட்டாலும், கேள்வி கேட்கும் திறனையாவது பெற முடியும்.. அதன்மூலம் ஒரு பதற்றத்தை பாஜகவுக்கு ஏற்படுத்த முடியும்.. இதற்கு சொந்த கட்சியை அரவணைத்து செல்ல வேண்டியுள்ளது.. கடந்த 2006-ல் சோனியா காந்தி செய்தாரே, அப்படி ஒரு கடினமான, துணிச்சலான முயற்சியை ராகுலும் எடுக்க வேண்டும்..
ஸ்டாலின்
அன்று சோனியா இருந்தபோது, சின்ன கட்சிகளை ஆதரித்தார்.. அனைவரையும் ஒன்று சேர்த்தார்.. இடதுசாரிகளின் ஆதரவை பெரும்பான்மையாக பெற்று பாஜகவுக்கு செக் வைத்தார்.. அப்படி ஒரு முயற்சிதான் இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையாக இருக்கிறது.. அதைதான் ஸ்டாலின் சொல்கிறார்.. அதைத்தான் கபில்சிபலும் சொல்கிறார்.. அதைதான் கடைகோடி காங்கிரஸ் தொண்டனும் சொல்கிறார்.. செய்வாரா ராகுல்?!