திமுகவிலிருந்து கடலூர் எம்.பி. ரமேஷ் நீக்கம்? கொலை வழக்கு பதிவான நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: கடலூர் திமுக எம்.பி ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலையில் ஊழியர் கொல்லப்பட்ட விவகாரத்தில் எம்.பி. ரமேஷ் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
டிஆர் பாலு, அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் உள்ள, திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ். ரமேசுக்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலையில், பணியாற்றியவர் பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு.

கோவிந்தராசு
கடந்த மாதம் 20ம் தேதி வேலைக்கு சென்ற இவர், வீடு திரும்பாத நிலையில், கோவிந்தராசு தற்கொலை செய்து கொண்டதாக திமுக எம்பி ரமேஷின் உதவியாளரிடம் இருந்து தகவல் வந்துள்ளது. குடும்பத்தார் பதறியடித்து போய் பார்த்தபோது, கோவிந்தராசுவின் உடல் முழுவதும் காயங்களும், ரத்தக் கரைகளும் இருந்துள்ளது. எனவே அவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

பாமக நெருக்கடி
திமுக எம்பி டி.ஆர்.வி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், ஆலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் சேர்ந்து கோவிந்தராசுவை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தனர். எனவே, உயிரிழந்த தொழிலாளி கோவிந்தராசுவின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தை பெரிய அளவில் கையில் எடுத்துள்ளார்.

ஜிப்மர் மருத்துவமனை
இந்த நிலையில், கோவிந்தராசுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், அவரது உடலை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவில் கோரியபடி, ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டனர். பிரேத பரிசோதனையில் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

ஆதாரங்கள்
மேலும் முந்திரி ஆலை தொழிலாளர்கள் அளித்த வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகளும் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உறுதி செய்தன. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார்5 பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். எம்.பி ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எம்பி ரமேஷ் தலைமறைவாகிவிட்டார்.

ஸ்டாலின் ஆலோசனை
இந்த நிலையில்தான், சென்னையில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். கொலை வழக்கில் எம்பி சிக்கி இருப்பதால், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கருதுவதால், ரமேஷை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே, எப்போது வேண்டுமானாலும், இது தொடர்பாந அறிவிப்பை திமுக தலைமைக் கழகம் வெளியிடும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications