அந்த ‘பாகுபலி மொமெண்ட்’.. அசத்தல் விளக்கம்.. உடன்பிறப்புகள் ‘ஃபயர்’ விட்டு கொண்டாடிய 5 சம்பவங்கள்!
சென்னை : பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சை திமுகவினர் பயங்கரமாக கொண்டாடி வருகின்றனர். ஸ்டாலினை வரவேற்கும்போது தொடங்கி ஸ்டாலின் பேசி முடிக்கும் வரை திமுகவினர் உற்சாக கோஷம் எழுப்பினர்.
தமிழகத்தில் மொத்தம் 31,600 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்துப் பேசினார். ஸ்டாலினின் பேச்சு உட்பட பல தருணங்களை திமுக உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் ஃபயர் எமோஜி போட்டு பகிர்ந்து கொண்டாடினர்.
நீட் தேர்வு, 16 முறை ஒன்றிய அரசு, திராவிட மாடல்-விமர்சனங்களை துவம்சம் செய்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பாகுபலி சம்பவம்
வரவேற்புரை ஆற்றிய மத்திய அமைச்சர் எல்.முருகன், ஆற்றல்மிகு முதலமைச்சர் எனக் குறிப்பிட்டு ஸ்டாலின் பெயரைச் சொன்னதும் தி.மு.கவினர் நீண்ட நேரம் ஆரவாரமாக குரல் எழுப்பினர். அவர் தொடர்ந்து பேச முடியாத வகையில் திமுக தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்ததால் எல்.முருகன் சிரித்தபடி கொஞ்சம் இடைவெளி விட்டு அதன்பிறகே தொடர்ந்து பேசினார். இது தொடர்பான காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, 'அமரேந்திர பாகுபலி மொமெண்ட்' என கொண்டாடினர்.
முஸ்லிம் பெண்ணுக்கு நலத்திட்ட உதவி
பாஜக ஆளும் மாநிலங்களில் அண்மையில் ஹிஜாப் சர்ச்சை எழுந்தது. ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதற்கு எதிராக இந்துத்வ அமைப்பினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால் மோதல்கள் உருவாகின. இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்ற மேடையில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் ஒருவருக்கு கலங்கரை விளக்க செயல் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டிற்கான சாவியை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்படைத்தார் பிரதமர் மோடி. இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு ட்ரெண்ட் செய்தனர் திமுகவினர்.
ஒன்றிய அரசு என பலமுறை
மேலும், பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே, பாஜகவினர் கோபப்படும் விஷயங்களை தொடர்ந்து பேசினார் முதல்வர் ஸ்டாலின். திராவிட மாடல், ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர்கள், கூட்டாச்சி தத்துவம் என பலவற்றையும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஒன்றிய அரசு" என தனது பேச்சில் 14 முறை தெளிவாகக் குறிப்பிட்டார். ஒன்றிய அரசு என அழைக்கக்கூடாது என பாஜகவினர் கூறி வரும் நிலையில், பிரதமர் முன்னிலையிலேயே ஸ்டாலின் அந்த வார்த்தையை அழுத்தமாகப் பேசியதையும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
திராவிட மாடல்
திராவிட மாடல் என்றால் என்ன என விளக்கம் அளித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் வளர்ச்சி பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல, சமூக நீதி, சமுத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் இவை அனைத்தும் சேர்ந்தது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் பேசினார். முதல்வரின் இந்தப் பேச்சுக்கு தி.மு.கவினர் தொடர்ந்து ஆரவாரம் செய்தனர்.
நேருக்கு நேராக கோரிக்கைகள்
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க அனுமதி தர வேண்டும் என ஆளுநர் கையெழுத்திட்ட மசோதாவைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது ஆளுநரும் மேடையில் இருந்தார். மேலும், கச்சத்தீவு மீட்பு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.14,006 கோடியை விரைந்து வழங்கவேண்டும், ஜி.எஸ்.டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும், தமிழையும் இந்திக்கு இணையாக ஆட்சி மொழி ஆக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஸ்டாலின் பேசினார். இதையே பிரதமருக்கு புரியும் வகையில் ஆங்கிலத்திலும் குறிப்புகளாகச் சொன்னார். இந்தக் காணொளியும் தீயாகப் பரவி வருகிறது.