திமுக தலைவர் தேர்தல்..நல்ல நேரத்தில் மனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின், துரைமுருகன்.. பரபர அறிவாலயம்
திமுக தலைவர் பதவிக்கான தேர்தலுக்காக, முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமையான இன்று ராகு காலம் முடிந்து நல்ல நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். தொண்டர்களும் நிர்வாகிகளும் குவிந்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் பரபரப்பாக காணப்படுகிறது.
திமுகவில் 15வது உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதன்படி பேரூராட்சி, நகராட்சி பதவிக்கான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தேர்வு நிறைவடைந்தது. தொடர்ந்து உயர் நிலையில் உள்ள தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல் வரும் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்தது.
இப்பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இவர்களை தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக.. லண்டனிலிருந்து திரும்பிய உதயநிதி ஸ்டாலின்! பரபரக்கும் இளைஞரணி!
பொதுக்குழு கூட்டம்
புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அமைந்தகரையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியின் லிங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல்
இந்நிலையில், இப்பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமையான இன்று 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் நண்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் மனு தாக்கல் செய்தார்.
போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் திமுக தலைவர் பதவிக்கு எந்தப் போட்டியும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கும் போட்டியிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வாக உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
புதிய துணைப்பொதுச்செயலாளர் யார்?
சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால் காலியான துணை பொதுச் செயலாளர் பதவிக்கு தகுதியான பெண் ஒருவரும் அன்றைய தினமே அறிவிக்கப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் காரணமாக திமுக தலைமைக் கழகமான அறிவாலயம் பரபரப்பாக காணப்படுகிறது. திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் சென்னையில் குவிந்து வருகின்றனர்.
பரபர ஆலோசனை
இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது 9ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு தீர்மானம், துணைப் பொதுச்செயலாளர் நியமனம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.