முதல் உள்ளாட்சி தேர்தல்.. கட்சியினருக்கு கமல்ஹாசன் ஸ்பெஷல் அட்வைஸ்.. கையில் எடுக்கும் மெகா அஸ்திரம்
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம், மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நாட்களில் அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். இத்தகைய சிறப்பு மிக்க கிராம சபை கூட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டு குடியரசு தினம் அன்றும் நடத்தப்படவில்லை.
ஓ மை காட்.. மனைவியின் வீடியோ.. தூக்கில் தொங்கி துடிதுடித்து தற்கொலை.. பார்த்து பார்த்து ரசித்த கணவன்
கிராம சபை கூட்டங்கள்
சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கமல்ஹாசனின் மக்கள்
நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறவில்லை. இதற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நமக்கு பெருமை
இந்த நிலையில் அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யுங்கள் என்று கட்சி தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கிராம சபைகளைப் பொருத்தவரை 'கடைசி மனிதனுக்கும் அதிகாரம்' எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு. கிராம சபைகளின் முக்கியத்துவத்தை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் பணியை மக்கள் நீதி மய்யம் திறம்படச் செய்தது எனும் பெருமை நமக்கு உண்டு.
சளைத்தவை அல்ல
கிராம சபைகளைக் கண்டு அஞ்சுவதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதை நடத்தாமல் இருப்பதிலும் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. கொரோனா பெருந்தொற்று இவர்களுக்கு மிக வசதியான ஒரு காரணமாக அமைந்தது. தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, பதவியேற்பு என எதையுமே தடுக்காத கொரோனா, கிராம சபை நடத்தப்படவேண்டிய நாள் வந்ததும் தலைவிரித்தாடிவிடும்.
615 நாட்களுக்குப் பிறகு
2020-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடந்த கிராம சபைதான் கடைசியாக நடந்த கூட்டம். பல்வேறு தரப்பின் அழுத்தத்தினாலும், 'கிராம சபை நடத்தும் என் உரிமையில் மாநில அரசு தலையிட முடியாது' என ஒரு பஞ்சாயத்துத் தலைவர் தொடர்ந்த வழக்கின் அழுத்தத்தினாலும் தமிழக அரசு, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி அன்று கிராம சபை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 615 நாட்களுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் கிராம சபை இது.
முதல் உள்ளாட்சித் தேர்தல்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில்தான் கிராம சபை நடைபெற இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்திற்கு இது முதல் உள்ளாட்சித் தேர்தல். நானும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டங்களில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
சுற்றுச்சூழல் மாசுபாடு
கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்போதே உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள். கிராமங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கைவளச் சுரண்டல், டாஸ்மாக், கைவிடப்படும் நீர்நிலைகள் குறித்து கவனம்கொள்ள கிராம சபைக் கூட்டங்கள் உதவட்டும்.
வலுவானவை
இந்தச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிக வலுவானவை. கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பொதுவெளியில் வைக்கவும், கூட்டங்களை வீடியோ பதிவு செய்வதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும். பல கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்ட அனுபவம் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு உண்டு. அந்த அனுபவங்களைக் கொண்டு கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யுங்கள். கடைசி மனிதரும் அரசியல் தெளிவு பெற்று தன் அதிகாரங்களை உணரும் வரை நம் பணி தொய்வில்லாமல் தொடர வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல் எடுத்த அஸ்திரம்
கமல்ஹாசன் எதிர்பார்த்தபடியே கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது மக்கள் நீதி மய்யத்துக்கு சாதகமானது என்று கூறப்படுகிறது. ஏனெனில் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு இதனை தமிழகம் முழுவதும் ஈர்க்க வைத்தவர் கமல்ஹாசன்தான். கிராம சபை கூட்டம் மூலம் கிராம மக்களுடன் நெருக்கமாக பழக முடியும் என்பதால், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்களை அஸ்திரமாக எடுக்க கமல் முடிவு செய்துள்ளார். கிராம சபை கூட்டம் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு சாதகமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.