தமிழகத்தில் சாரல் மழை...3 ஆம் தேதி இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக பல ஊர்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் 3ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவ காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் , வால்பாறையில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. குழித்துறை, அவலாஞ்சியில் தலா 3 செமீ, தேனி மாவட்டம் தேக்கடி, பூதப்பாண்டி,பந்தலூரில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை விமான நிலையம், பெரியாறு ராதாபுரம்,போச்சம்பள்ளி,தொழுதூரில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள். தென் மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளைய தினம் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் 01.09.2021,கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்றுடன் முடிவுக்கு வரும் மழை.. சின்னதா ஒரு ரெஸ்ட் எடுத்துட்டு திரும்பி வரும்.. வெதர்மேன்
வரும் 02.09.2021,03.09.2021 ஆகிய தேதிகளில் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்றைய தினம் கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.