ஐஐடியில் ‛‛அவா’’ விடமாட்டார்.. அரசியலுக்காக இந்தியை திணிக்கும் மோடி-அமித்ஷா.. விளாசிய தயாநிதி மாறன்
சென்னை: ஐஐடியில் இந்தி மொழி கொண்டு வர ‛‛அவா'' விடமாட்டார். குஜராத்தியை தாய்மொழியாக கொண்ட மோடி-அமித்ஷா நாட்டை ஆள்வதற்காகவும், அரசியலுக்காகவும் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள் என திமுக எம்பி தயாநிதி மாறன் கடுமையாக விமர்சித்தார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
மேலும் ஒரே பொது நுழைவு தேர்வு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கும் தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுகவின் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
இந்தி திணிப்பு பேசும் உதயநிதி ஸ்டாலின்.. இந்தி படத்தை விநியோகிப்பது ஏன்? சீறும் அண்ணாமலை!
திமுக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் இன்று திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பு மற்றும் பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுக.இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தயாநிதி மாறன் பேசினார்.
தேர்தல் ஆயுதமாக இந்தி திணிப்பு
உண்மையில் மோடி, அமித்ஷாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் நமது தமிழ் உணர்வுகளை வெளிக்கொண்டு வருகிறீர்கள். நாடாளுமன்ற தேர்தல் வரும் போதெல்லாம் பாஜகவின் முதல் ஆயுதம் மதம், 2வது ஆயுதம் இந்தி திணிப்பு. 2024 தேர்தலுக்கு இப்போது பாஜக தயாராகி வருகிறது. இதற்கான ஆயுதம் தான் தற்போதைய இந்தி திணிப்பு.
உங்கள் தாய்மொழி குஜராத்தி தானே
ஒரு மனிதருக்கு மிக முக்கிய பாசம், பந்தம் உண்டென்றால் அது தாய். தாய் வயிற்றில் இருந்து பிறந்த மனிதன் தாய் மீது பாசம் கொண்டிருப்பான். அதனால் தான் நாம் பேசும் மொழியை தாய் மொழி என்கிறோம். மோடி, அமித்ஷா அவர்களே உங்களின் தாய்மொழி இந்தி-யா?. குஜராத்தி தானே. அந்த மொழி மீது பாசம் இல்லையா?. ஆனால் ஆள்வதற்கு தேவை இந்தி என்பதால் இந்தியை திணிக்கிறீர்கள். இந்தி பேசும் மக்கள் அடிமைத்தனமாக உங்களுக்கு வாக்களிக்கிறார்கள் எனும் ஒரே காரணத்துக்காக இந்தியை நீங்கள் திணிக்கிறீர்கள்.
கொடுமை-வெட்கம்
நாளை மத்திய பிரதேசத்துக்கு அமித்ஷா செல்ல உள்ளாராம். அங்கு மருத்துவம் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்தியில் அச்சிடப்பட்ட புத்தகங்களை கட்டாயமாக கொடுத்து இந்தியை புகுத்த போகிறாராம். இதில் கொடுமை, வெட்கம் என்ன தெரியுமா. இவர்கள் மருத்துவம் படித்து முடித்து கல்வி சான்றிதழ் வழங்கும்போது இந்தியில் படித்ததாக சான்றிதழ் பெறமாட்டார்களாம். அதனை மறைத்து விடுவார்களாம். ஏனென்றால் அது அவமானமாம். இந்த செயல் தேவையா.
‛அவா’ விடமாட்டார்
கடந்த 77 ஆண்டுகளாக இந்தியா முன்னேறவில்லையா?. ஏன் இந்தியாவில் தலைசிறந்த மாநிலங்கள் எது என்றால் இந்தி பேசாத மாநிலங்கள் தானே. இந்தியை நாங்கள் ஐஐடி, ஐஐஎம்-மில் கொண்டு வரப்போகிறோம் என்கிறோம். முடிந்தால் ஐஐடியில் கொண்டு வாருங்கள் பார்க்கலாம். ஏனென்றால் ‛அவா' விடமாட்டார். ஐஐடியில் இந்தி என பேச்சுக்கு சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள்.
உங்கள் பருப்பு வேகாது
பாருங்கள் எங்களின் இளைஞரணி செயலாளர் வந்துவிட்டார். அடுத்த ரத்தம் தயாராகி விட்டது. இந்திக்கு எதிராக அண்ணா ஏந்திய கொடி, கலைஞர் ஏந்திய கொடி, தளபதி ஸ்டாலின் ஏந்திய கொடியை தற்போது உதயநிதி ஏந்தி விட்டார். மோடி, அமித்ஷாவே உங்கள் பருப்பு இங்கு வேகாது''என ஆக்ரோஷமாக பேசினார்.