தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்தும் கொரோனா உயிரிழப்புகள்.. இணை நோய் இல்லாத 91 உட்பட 364 பலி
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இணை நோய்கள் இல்லாத 91 பேர் உட்பட 364 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தில் இருந்து கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்துள்ளது. மாநிலத்தில் பல வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்த கொரோனா பாதிப்பு, சில நாட்களாக 33 ஆயிரத்திலேயே உள்ளது.
ஆனாலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இணை நோய் இல்லாதவர்களின் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,60,463 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 12 பேர் உட்பட 33059 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது வரை கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,64,350ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1296 பேர் 12 வயதுக்கு உட்படச் சிறார்கள் என்பது மற்றொரு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

கொரோனா உயிரிழப்புகள்
தமிழகத்தில் நேற்று 335 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 364ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 192 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 172 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். மேலும், இன்று உயிரிழந்தவர்களில் 91 பேர் எவ்வித இணை நோய்களையும் கொண்டிருக்காதவர்கள். மேலும் 50 வயதுக்குக் குறைவானவர்களும் இன்று 86 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வரை கொரோனாவால் 18,369 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேநேரம் ஆக்டிவ் கேஸ்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 2,31,596ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 2,42,929ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 21,362 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், தமிழகத்தில் இதுவரை 14,03,052 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
தலைநகர் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6016 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் கொரோனாவால் 85 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் 3071 பேருக்கும் செங்கல்பட்டில் 2299 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications