கொடுமை.. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் வயது 4 முதல் 13-க்குள்தான்
சென்னை: கொரோனா ஏகப்பட்ட கொடுமைகளுக்கு காரணமாகியுள்ளது. அதில் ஒரு கொடுமைதான், பெற்றோரின் உயிரை பறித்து, குழந்தைகளை அனாதையாக்கியுள்ளதும்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் நெஞ்சை உறையச் செய்வதாக உள்ளது. அவர்கள் கணக்குப்படி, 9,346 குழந்தைகள், கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனராம். குழந்தைகளில் 4860 சிறுவர்கள் மற்றும் 4486 சிறுமிகள்.
அதில் 3,332 பேர் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள். 3 வயதுக்குக் குறைவான 788 குழந்தைகளும், 4-13 வயதுக்குட்பட்ட 5226 குழந்தைகளும் தந்தை அல்லது தாய் என யாராவது ஒரு பெற்றோரை இழந்துள்ளனர். சிறுவர் முகாம்களில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடத்தும் விசாரணையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் குழந்தையை அடையாளம் கண்டுகொள்வதும், பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தையையும் கண்காணிப்பதற்கான ஒரு நடைமுறையை உருவாக்குவதும் முதல் கட்ட நடவடிக்கையாகும் என்று குழந்தைகள் உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.
இதுபோன்ற குழந்தைகளின் தரவுகளை சேகரிக்க 'பால் ஸ்வராஜ்' 'Bal Swaraj' என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.