கருணாநிதி நினைவலைகளை துரைமுருகன் பேச பேச.. மேடையில் தேம்பி தேம்பி அழுத டி.ஆர்.பாலு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவலைகளை அமைச்சர் துரைமுருகன் பேசிக் கொண்டிருந்த போது மேடையில் அமர்ந்திருந்த ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு தேம்பி தேம்பி அழுத காட்சிகள் பார்ப்பதற்கு உருக்கத்தை ஏற்படுத்தியது.
திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு எழுதிய பாதை மாறா பயணம் நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் டி.ஆர். பாலு எழுதிய புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
நூலின் முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இரண்டாவது பிரதியை கவிஞர் வைரமுத்துவும் பெற்று கொண்டனர். இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி, கவிஞர் வைரமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சுப வீர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கர்நாடகா தேர்தல்: உச்சம் தொடும் காங்கிரஸ்.. பாஜகவுக்கு பெரிய ஷாக்.. முதல் சர்வே முடிவில் ட்விஸ்ட்!
முதல்வர் ஸ்டாலின்
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்கத்தினரின் வாழ்க்கை வரலாறு முழுவதும் கிடைத்திருந்தால் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும். அனைவரும் கழகத்தின் அனுபவங்களை நூல்களாக வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கிறேன். தமிழ்நாட்டிற்காக இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் டி.ஆர்.பாலு.
17 வயதில் தீவிர அரசியல்
17 வயதில் தீவிர அரசியலில் நுழைந்த பாலு ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே தலைமை என கொள்கைப் பிடிப்போடு இப்போதும் இருந்து வருகிறார். இளம் தென்றல் என்ற பட்டத்தை எனக்குச் சூட்டியவர் டி.ஆர். பாலுதான். அண்ணா கலைக்கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். எனக்கு பேச்சு பயிற்சிக் களமாக அமைந்தது டி.ஆர்.பாலுவின் அண்ணா கலைக்கழகம்தான்.
மிசா காலம்
மிசா காலத்தில் டி.ஆர்.பாலுவுக்கும் எனக்கும் இடையேயான நட்பு இன்னும் நெருக்கமானது. மாவட்டச் செயலாளராக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் டி.ஆர்.பாலு. கருணாநிதியிடத்திலேயே கணையாழி விருது பெற்றவர். 27 ஆண்டுகள் எம்பி, 3 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார் பாலு. இப்போது கூட அவரது நடை, உடை ஒன்றிய அமைச்சர் போன்றே இருக்கும். இவையெல்லாம் டி.ஆர்.பாலுவின் உழைப்பிற்கு கிடைத்த ஊதியம்.
கருணாநிதி தீவிரம்
சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த கருணாநிதி தீவிரம் காட்டினார். சேது சமுத்திர திட்டத்திற்கு நிதி ஒதுக்க உதவியாக இருந்தவர் டி.ஆர். பாலு. ஆனால் இந்த திட்டத்தை பாஜக தடுத்து விட்டது. சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர். பாலு கையில் எடுக்க வேண்டும் . இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். முன்னதாக அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் கருணாநிதியின் நினைவலைகளை பகிர்ந்தார்.
துரைமுருகன் பேச்சு- பாலு கண்ணீர்
கருணாநிதி சொன்னதாக துரைமுருகன் பேசுகையில், "பாலு நீ சொன்னதுதான்ப்பா கரெக்ட். நான்தான்ப்பா அவசரப்பட்டு சொல்லிட்டேன்".. அடுத்த வார்த்தை கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா... "என்னை மன்னிச்சிடு பாலு" .. தான் சொன்ன கருத்துக்கு தொண்டனிடம் மன்னிப்பு கேட்ட மகத்தான தலைவர் கருணாநிதி என துரைமுருகன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கருணாநிதியின் இறப்பை எண்ணியும் அவருடன் தான் பழகிய விதத்தை எண்ணியும் டி.ஆர்.பாலு தேம்பி தேம்பி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.