முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்ற திமுக எம்பி வில்சனின் மகன்.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்ட ரிச்சர்ட்சன் வில்சன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர் திமுக மாநிலங்களவை எம்பி பி. வில்சனின் மகனாவார்.
தமிழகத்தின் முன்னாள் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தவர் பி வில்சன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களவைக்கு திமுகவால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.
இவர் தமிழக அரசின் சார்பாக பல முக்கிய வழக்குகளில் வாதிட்டுள்ளார். சமச்சீர் கல்வி, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் உள்ளிட்ட வழக்குகளில் திமுக சார்பில் வாதாடியவர்.
ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு... சமூக நீதி போராட்டத்துக்கான வெற்றி... திமுக எம்.பி. வில்சன்!!
முன்னாள் முதல்வர்
இதனால் வில்சன் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமாக இருந்த மறைந்த கருணாநிதியிடம் நற்பெயரை பெற்றவர். ஒரு வழக்கின் வெற்றி விழாவில் வில்சனை பாராட்டிய கருணாநிதி, நீங்கள் Wilson அல்ல, Winson ஆகவே எப்போதும் இருக்க வேண்டும் என பாராட்டினாராம்.
2018ஆம் ஆண்டு
மறைந்த முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்தார். இவரை அடக்கம் செய்ய கருணாநிதியின் விருப்பமான மெரினாவில் அண்ணாவுக்கு பக்கத்தில் ஒரு இடம் ஒதுக்குமாறு ஸ்டாலின் உள்ளிட்டோர் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்கள் சட்ட சிக்கல்களை காரணம் காட்டி அளிக்கவில்லை.
அடக்கம் செய்ய இடம்
இதையடுத்து மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தராததை அடுத்து திமுக சார்பாக வழக்கறிஞர் வில்சன் இரவோடு இரவாக வழக்கு போட்டு அதிகாலை வரை நடந்த இந்த விசாரணையில் அந்த வழக்கில் தனது வாதத் திறமையால் வெற்றியும் கண்டார். வழக்கில் திமுக வென்றது குறித்து அறிந்த ஸ்டாலின் ராஜாஜி ஹாலில் பொதுமக்களுக்கு நன்றி கூறி கதறி அழுத காட்சியை மறக்க முடியாது.
வில்சன்
இதற்கு கைமாறாக கடந்த 2019ஆம் ஆண்டு வில்சனை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தால் ஸ்டாலின். இதையடுத்து முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கடந்த இரு ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தனது செயல்திறன் குறித்து அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்திருந்தார் வில்சன்.
எம்பி வில்சனின் செயல்பாடுகள்
அதில் 97% வருகை, 3 குழுக்களில் 100% வருகை, 91 விவாதங்கள், 75 நாடாளுமன்றத்தில் கேள்விகள், 10 சிறப்பு கவனஈர்ப்பு விவாதம் மற்றும் 3 தனிநபர் மசோதா #NEET ரத்து உள்பட என்று வில்சன் குறிப்பிட்டிருந்ததை அடுத்து அவரை முதல்வர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார். நீட் தொடர்பாக திமுக எம்பி வில்சனின் செயல்பாடுகள் திமுக அரசுக்கு பெருமை சேர்த்தன.
முதல்வரிடம் பாராட்டு
இந்த நிலையில் வில்சனின் மகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக ரிச்சர்ட்சன் வில்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படத்தை வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தந்தையை போல் மகனும் தனது சிங்க நிகர் வாதங்களால் முத்திரை பதிக்க வேண்டும் என நெட்டிசன்கள் வாழ்த்தியுள்ளனர்.