கதவை மூடிய திமுக.. விலகிய "புலிப்படை".. லேண்ட் ஆக முடியாமல் தள்ளாடும் "லொடுக்கு பாண்டி"!
சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய கருணாஸ், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான கருணாஸ், அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த 5 வருடங்களில் தொகுதி பக்கம் பெரிதாக தலைக்காட்டாத கருணாஸ், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடித்து வந்தாரே தவிர, முதல்வர் பழனிசாமிக்கு அவர் ஆதரவாக இல்லாதது போன்றே கண்டும் காணாத மோடில் இருந்தார்.
புதுச்சேரி முதல்வர் வேட்பாளர் பெரிய மாமனார் ரங்கசாமியா? மருமகன் நமச்சிவாயமா? இடியாப்ப சிக்கலில் பாஜக
கொற்றப் பரம்பரை
இந்நிலையில், கடந்த மார்ச் 6ம் தேதி அதிமுகவில் இருந்து விலகுவதாக கருணாஸ் அறிவித்தார். அப்போது அவர், "முதல்வர் பழனிசாமி வன்னியர் சமுதாயத்தையும், அவர் சார்ந்த சமுதாயத்தையும் கையிலே எடுத்து, ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமுதாயத்தையும் புறந்தள்ள முடிவெடுத்திருக்கிறார். ஒருசில தலைவர்கள் நாங்கள் சார்ந்த சமுதாயத்தை குற்றப்பரம்பரையினர் என கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர். நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல, கொற்றப் பரம்பரை. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவில் 75 லட்சம் பேர் முக்குலத்தோர்தான்" என்று கூறி வெளியேறினார் கருணாஸ்.
எதிர்பார்த்த கருணாஸ்
அதேசமயம், அவர் அமமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். அதுமட்டுமின்றி, சட்டமன்ற தேர்தலில் சீட் ஒதுக்கும்படியும் கோரியிருந்தார். ஆனால், திமுக தலைமை இதுவரை அவரை அழைத்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இத்தனைக்கும் கருணாஸ் இரண்டு தொகுதிகள் வரை திமுக ஒதுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். குறைந்தபட்சம் ஒரேயொரு தொகுதி ஒதுக்கினாலும் மகிழ்ச்சி தான் என்ற நிலையிலும் அவர் இருந்தார்.
அதுவே பிரச்சனை
முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த கருணாஸ், டிடிவி தினகரன் பக்கம் செல்லாமல், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு, தினகரன் தான் காரணம் என்று கூறப்படுகிறது. கருணாஸும், டிடிவி தினகரனும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், கருணாஸ் கூட்டணி சேருவதால் மட்டுமே முக்குலத்தோர் வாக்குகளைப் பெற முடியும் என்ற அவசியமில்லை. தனது பெயருக்காகவே சமுதாய வாக்குகள் வந்துவிடும் என்று டிடிவி கருதுகிறாராம்.
மக்கள் நீதி மய்யம் அழைக்குமா?
இந்நிலையில், திமுக எந்த அழைப்பும் விடுக்காததால் திமுகவுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கருணாஸ் தற்போது அறிவித்துள்ளார். ஏற்கனவே, அமமுகவுடன் செல்லாமல் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த கருணாஸுக்கு இப்போது திமுகவும் கதவை மூட, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் உள்ள மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அழைப்பு வந்தாலும் வரலாம்.