ஆடு, மாட்டை போல் அடிச்சாங்க.. இப்போ காங்கிரஸில் இருந்து நீக்கிட்டாங்க.. ரூபி மனோகரன் கொந்தளிப்பு
சென்னை: ‛‛களக்காட்டில் இருந்து சென்னைக்கு சென்ற என்னுடைய பிள்ளைகளை ஆடு, மாட்டை அடிப்பது போல் அடித்துவிட்டு ஒன்றும் செய்யாத என்னிடம் விளக்கம் கேட்டு இடைநீக்கம் செய்துள்ளனர். இது ரொம்ப வருத்தமாக இருக்கிறது'' என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் கொந்தளித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சத்தியமூர்த்தி பவனில் மோதல்.. நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட்!
ரூபி மனோகரன் இடைநீக்கம்
இந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளருமான, திருநெல்வேலி மாவட்டம் நாங்கநேரி தொகுதியி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன், எஸ்சி பிரிவு தலைவர் எம்பி ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்க நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க கூறப்பட்டு இருந்தது. ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று ரூபி மனோகரன் ஆஜராகவில்லை. அவர் விலக்கு கோரி கடிதம் அனுப்பி இருந்தார். இதனை ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்கவில்லை. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அறிவிக்கப்பட்டது.
ரூபி மனோகரன் பேட்டி
இந்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் ரூபி மனோகரன் எம்எல்ஏ இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக கட்சி சார்பில் இன்று விளக்கம் அளிக்க கோரியிருந்தனர் களக்காட்டில் நிறைய நிகழ்ச்சியில் வைத்துள்ளேன். இதனால் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் கேஆர் ராமசாமியிடம் இன்னும் கொஞ்சம் நாள் தாங்க என கேட்டிருந்தேன். சுப்ரீம் கோர்ட்டில் கூட விசாரணைக்கு ஆஜராக நேரம் கேட்பார்கள். அதேபோன்று தான் நானும் நேரம் கேட்டேன். இப்போது என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். இதனை நீங்களும் சொன்னீர்கள். வாட்ஸ்அப்பிலும் பார்த்தேன். இது எனது மனதுக்கு மிகவும் கஷ்டமானதாக உள்ளது.
மிகப்பெரிய வருத்தம்
கட்சிக்காக 20 ஆண்டுகளாக நான் எனது தொழிலை கூட விட்டுவிட்டேன். காங்கிரஸ் தலைவராக இருந்த தங்கபாலு, இவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசு உடன் வேலை செய்துள்ளேன். இப்போது உள்ள தலைவருடனும் 2 ஆண்டு காலம் கடுமையாக உழைத்து வருகிறேன். இந்த நிலையில் தான் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கான செய்தி வந்துள்ளது. இதை என்னால் தாங்க முடியவில்லை. நான் கட்சியை பற்றியும், தலைவர்கள் பற்றியும் எந்த குறையும் கூறவில்லை. ஆனால் எனக்கு மிகப்பெரிய வருத்தம் உள்ளது.
ஆடு-மாட்டை அடிப்பது போல்..
களக்காட்டில் இருந்து சென்னைக்கு சென்ற என்னுடைய பிள்ளைகளை ஆடு, மாட்டை அடிப்பது போல் அடித்துள்ளனர். இதுபற்றி யாரிடம் விளக்கம் கேட்கணுமோ அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் ஒன்றும் செய்யாத என்னிடம் விளக்கம் கேட்டுள்ளனர். எந்த தவறு நான் செய்தேன் . தமிழகத்தில் நாங்குநேரி தொகுதியில் 35 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இது தமிழகத்தில் சரித்திரமாக உள்ளது. வேறு எந்த தொகுதியிலும் இவ்வளவு உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. தற்போதைய முடிவு என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது'' என்றார்.