சீமானுக்கு அதிர்ச்சி தந்த 'வலது கரம்'... அண்ணன் 'தோழர்' விஜய்க்கு நல்வாழ்த்துகள்- 'தம்பிகள்' ஷாக்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை அதன் தலைவர் நடிகர் விஜய் அறிவித்தது முதலே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும் நடிகர் விஜய் கட்சியின் கொள்கைகள் தங்களுக்கு ஒத்துவராதவை; எதிரானவை என்று சீமான் கூறினாலும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து விஜய்-க்கு ஆதரவை தெரிவித்து வருவது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசப்பட்ட போது சீமான் மிகக் கடுமையாக எதிர்த்தார். அதன் பின்னர், தம்பி விஜய் என உரிமை எடுத்துக் கொண்டு 'கூட்டணியாக' இணைந்து செயல்படப் போவதாக பூடகமாக தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய் கட்சியை அறிவித்து மாநாடு நடத்தப் போவதாக கூறியபோது, மாநாட்டில் பங்கேற்பேன் என்றார் சீமான். ஆனால் சீமானை மாநாட்டுக்கு விஜய் அழைக்கவில்லை. இதன் பின்னர் விஜய் குறித்த கருத்துகளில் சீமான் மாறுபாட்டு பேசினார்.
தற்போது விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டில் தந்தை பெரியார்தான் எங்கள் வழிகாட்டித் தலைவர் என விஜய் பிரகடனம் செய்ததை கடுமையாக விமர்சித்திருக்கிறார் சீமான். மேலும் விஜய்யின் கொள்கைகள் எங்களுக்கு ஒத்துவராதவை; எதிரானவை எனவும் பகிரங்கமாகவே தெரிவித்தார் சீமான்.
ஆனால் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் நடிகர் விஜய் பக்கம் தாவப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி காளியம்மாள், பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக என்னக்கா விக்கிரவாண்டியிலா இருக்கிறீர்கள்? என காலை முதலே செல்போன் அழைப்புகள் வந்தன என பேசியிருந்தார். நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனும் தொடர்ந்து விஜய்-க்கு ஆதரவாக பல வீடியோ பதிவுகளைப் போட்டு வந்தார். அதன் பின்னரே விஜய் குறித்த விமர்சனப் பார்வையையும் முன்வைத்தார்.

அத்துடன் இல்லாமல் " விஜய் மாநாடு குறித்து காணொளி வெளியிட்டால் விஜய் கட்சியில் சேரப் போகிறீர்களா ? அண்ணாமலையைப் பற்றி பேசினால் பாஜகவில் இணையப் போகிறீர்களா? எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குறித்து பேசினால் அதிமுகவில் இணையப் போகிறீர்களா? சவுக்கிற்கு எதிராக காணொளி வெளியிட்டால் திமுகவில் இணைந்து விட்டீர்களா? இப்படி கேட்கும் உங்கள் அற்பத்தனத்தை நினைத்து பெரிதும் வியக்கிறேன் ! நான் யார் என்பது நான் ஏற்றுக் கொண்ட தலைமைக்குத் தெரியும் !" எனவும் பதிவிட்டு நாம் தமிழர் கட்சியில் விஜய் ஆதரவு போக்கால் சலசலப்பு ஏற்பட்டுள்ளதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் சீமானின் வலதுகரமாக இருந்தவருமான ஜெகதீச பாண்டியன் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தமது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,
யாரை தலைவராக நினைத்தோமோ!
அவர் நடிகராகிப் போனார்!
யாரை நடிகராக நினைத்தோமோ!
அவர் தலைவராகிப் போனார்
- உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்
கொள்கைப் பிரகடன
அரசியல் மாநாட்டை நடத்திய
அன்பு அண்ணன் தோழர் விஜய் அவர்களுக்ககு நல் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறீர்களா? என ஜெகதீச பாண்டியனின் எக்ஸ் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியினர் கேள்விகளை கேட்டு பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications