ஆண்மை இருந்தா ராஜினாமா செஞ்சுட்டு தனியா நில்லுங்க-கொந்தளித்த அதிமுக, பின்வாங்கிய நயினார் நாகேந்திரன்
சென்னை : ஆண்மையோடு பேச அதிமுகவில் யாரும் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
இந்த நிலையில் தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு பாஜக சார்பில் உண்ணாவிரத சென்னை போராட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் பேச அதிமுகவில் ஒருவருக்கும் ஆண்மை இல்லை என பேசியதாக செய்திகள் வெளியானது.

ஆண்மையுடன் பேசவில்லை
அதிமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படவில்லை எனவும் சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேச அதிமுகவில் ஒருவரும் இல்லை என பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுக மக்கள் பிரச்சினையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை எனவும் , எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.

கடும் கண்டனம்
நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு காரணமாக அதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தொடர்ந்து அவருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து வருகின்றனர். நயினார் நாகேந்திரன் ஆண்மை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். கூட்டணி போட்டு அதிமுகவின் தோளில் ஏறி நின்ற நயினார் நாகேந்திரன், தற்போது இப்படி பேசுவது சந்தர்ப்பவாதம் எனவும், அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

அதிமுக ஐடி விங்
இதுகுறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பது போல், அதிமுகவின் தயவால் சட்டமன்றத்தில் நுழைந்து, தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள அதிமுகவுக்கு அரசியல் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை.ஆண்மையோடு தனித்து நில்லுங்கள் @NainarBJP ! என கூறப்பட்டுள்ளது

அதிமுகவின் தோள் மேல்..
மேலும் நயினார் நாகேந்திரனின் கருத்து குறித்து குறித்து பதிவிட்டுள்ள அதிமுக ஐடி விங் நிர்வாகியும், மதுரை ராஜன் செல்லப்பாவின் மகனுமாகிய ராஜ் சத்யனின் ட்விட்டர் பதிவில், அண்ணன் @NainarBJP
, நீங்கள் வேண்டுமானால் @AIADMKOfficial தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் ....??? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்....!! என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

நயினார் நாகேந்திரன் விளக்கம்
இந்நிலையில் அஇஅதிமுக பற்றிய தன்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்து கொள்ளபட்டுள்ளது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்! என பதிவிட்டுள்ளார்.
ஆண்மையோடு பேச அதிமுகவில் யாரும் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படவில்லை சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேச அதிமுகவில் ஒருவரும் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். நயினார் நாகேந்திரன் இந்தப் பேச்சுக்கு அதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தொடர்ந்து அவருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து வருகின்றனர். நயினார் நாகேந்திரன் ஆண்மை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications