கரூர் சம்பவம்.. SIT முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதா? எதை மறைக்க பார்க்கிறது திமுக அரசு?- பாஜக கேள்வி
சென்னை: கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தின் போது, 41 நபர்கள் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இது தொடர்பான வழக்கு, முதலில் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 13 ஆம் தேதி நடந்த விசாரணையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான குழுவினர் நேற்று கரூருக்குச் வந்தனர். இந்த சிபிஐ அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு வசம் இருந்த 1,316 பக்கங்கள் கொண்ட விசாரணை கோப்புகள் இன்று ஒப்படைக்கப்பட்டன. மற்றவற்றை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீயிட்டு எரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில், "கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு மனதில் பல கேள்விகளையும் எழுப்புகிறது.
1. விசாரணை முடியும் முன்னரே வழக்கு தொடர்பான காகிதங்களை அழிப்பதற்கு அனுமதி தந்தது யார்?
2. பென்டிரைவைக் கூட விசாரணை நடத்தப்பட்ட இடத்தில் வைத்தே எரிக்கும் அளவிற்கு அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது?
3. அவசரகதியில் சிறப்புப் புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி அதனை உச்ச நீதிமன்றம் தடைவிதித்த உடனேயே ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது ஏன்?
4. உச்ச நீதிமன்றமோ அல்லது ஏதேனும் சட்டமோ ஆவணங்களை அழிக்க வேண்டும் என்று கூறுகிறதா?
5. விசாரணை முடியும் முன்னரே சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை ஒருதலைபட்ச கருத்துகளை ஆர்வமாகத் தெரிவித்த நிலையில், தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது எதனை மறைக்க? யாரைக் காப்பாற்ற?
கரூர் துயரச் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்குத் திமுக அரசு முதலில் மறுத்தது, சட்டசபை வளாகத்தில் வைத்தே அமைச்சர்கள் அவசரகதியாக மாற்றி மாற்றி கருத்துகளைத் தெரிவித்தது, தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது என இவையனைத்தும் திமுக அரசு எதையோ மறைக்க முயற்சிப்பதையே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், உண்மை என்றும் உறங்காது! தமிழக பாஜக உறங்கவும் விடாது!
எனவே, வழக்கம் போல வாய்ப்பூட்டு அணிந்து திசைதிருப்பு நாடகங்களில் ஈடுபடாமல் ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக உடனடியாக திமுக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications