சென்னையில் களைகட்டிய நம்ம ஊர் திருவிழா... பாரம்பரிய கலைகளை குடும்பத்தோடு கண்டு ரசித்த மக்கள்
சென்னை தீவுத்திடலில் நம்ம ஊர் திருவிழா பாரம்பரிய கலைநிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மங்கல இசையில் தொடங்கி கிராமத்து இசைக்கலைஞர்கள், நாட்டுப்புற பாடல் என களைகட்டிய விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்
சென்னை: கொரோனா தொற்றினால் கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில், அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் தீவுத்திடலில் 'நம்ம ஊரு திருவிழா' நேற்று நடைபெற்றது. மங்கல இசையில் தொடங்கி கிராமத்து இசைக்கலைஞர்கள், நாட்டுப்புற பாடல் என களைகட்டிய விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது பொங்கல் பண்டிகை காலத்தில் சென்னை சங்கமம் என்ற பெயரில் வீதிகள் தோறும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததையடுத்து, கடந்த பொங்கல் பண்டிகையின்போது 'நம்ம ஊர் திருவிழா' என்ற பெயரில் ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பால் இந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.

ஒத்தி வைக்கப்பட்ட 'நம்ம ஊர் திருவிழா' நிகழ்ச்சி, தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் நேற்று வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முன்னிலையில் தமிழ் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
இந்த திருவிழாவில் கட்டைக்கூத்து, கொம்பு இசை, பெரிய மேளம், மகுடம், துடும்பு மேளம்,பம்பை மேளம், நையாண்டிமேளம், தோல்பாவைக் கூத்து, சிலம்பாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், மரக்காலாட்டம், தீ சாகசம் போன்ற சாகச கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 400க்கும் மேற்பட்ட கலைஞர்களால் பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சின்னப்பொண்ணு, வேல் முருகன் நாட்டுப்புற பாடல்கள் பாடினர்.அதைக் கேட்டு பார்வையாளர்கள் உற்சாகமாக நடனமாடினர். கானா பாலா பாடிய கானா பாடல் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது. விழாவில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து குடும்பம் குடும்பமாக சென்னை தீவுத்திடலுக்கு வந்து நம்ம ஊர் திருவிழாவை ரசித்தனர்.
'டிரம்ஸ்' சிவமணி தனது இசை மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். கிராமிய மணம் கமழும் வகையில் அம்மன் ஆட்டம், பறையாட்டம், கரகாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலரும் உற்சாகமாக நம் ஊர் திருவிழாவில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications